"35 நிமிடத்தில் 6 பேர் கொலை" தெலங்கானாவை பதற வைத்த ஒற்றை ஆள்.. யார் இந்த ராஜ்குமார்? ஷாக் பின்னணி
ஹைதராபாத்: தெலங்கானாவில் போக்சோ வழக்கில் சிக்கி முன் ஜாமீன் பெற்ற 35 வயது நிரம்பிய இளைஞர் தனது மனைவி, 2 மகன்கள், தன்மீது பாலியல் புகார் அளித்த சிறுமி, அவரது தாய், பாட்டி என மொத்தம் 6 பேரை கொன்றுள்ளார். இந்த 6 கொலைகளையும் அந்த இளைஞர் வெறும் 35 நிமிடத்தில் செய்து முடித்துள்ளதும், அதன் நடுங்க வைக்கும் பின்னணி குறித்த திடுக்கிட வைக்கும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
தெலங்கானா மாநிலம் ரங்கரெட்டி மாவட்டம் ஷாபாத் பகுதியை சேர்ந்தவர் வசித்து வந்தவர் ராஜ்குமார் (வயது 35). இவர் தான் நேற்று இரவில் மொத்தம் 6 பேரை கொலை செய்துள்ள கொடூரன்.

ராஜ்குமார் சமீபத்தில் தான் 'போக்சோ' வழக்கில் கைதாகி ஜாமீனில் வெளிவந்தார். ஜாமீனில் இருந்த அவர் தன்மீது புகாரளித்த சிறுமி, அவரது தாய், பாட்டி ஆகியோரை முதலில் கொன்றுள்ளார். அதன்பிறகு தனது வீட்டிற்கு சென்று மனைவி, 2 மகன்களை தீர்த்து கட்டி உள்ளார். இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:
ஷாபாத் பகுதியை சேர்ந்த ராஜ்குமார் டவுன் பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமியை பின்தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்தார். இதுபற்றி போலீசில் புகார் செய்யப்பட்டது. மே மாதம் ராஜ்குமார் போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டார். அவர் ஜாமீனில் வெளியே வந்தார். நேற்று இரவு வீட்டில் இருந்து ராஜ்குமார் தனது காரில் இரவு 10.45 மணிக்கு தன்மீது பாலியல் புகார் அளித்த சிறுமியின் வீட்டுக்கு சென்றுள்ளார். கதவை தட்டி உள்ளார்.
சிறுமியின் தாய் கதவை திறந்துள்ளார். கதவை திறந்ததும் ராஜ்குமார், அவரை கத்தியால் குத்தினார். இதில் அவர் சம்பவ இடத்திலேயே இறந்தார். அதன்பிறகு வீட்டிற்குள் நுழைந்த ராஜ்குமார் சிறுமியின் பாட்டியை கத்தியால்குத்தி கொன்றார். வீட்டில் சிறுமியின் சகோதரி மாற்றுத்திறனாளியாக இருந்தார். அவரை ஒன்றும் செய்யாத ராஜ்குமார், தன் மீது புகாரளித்த சிறுமியை வலுக்கட்டாயமாக தூக்கி காரில் கடத்தினார். அந்த பகுதியில் உள்ள ஏரி அருகே சென்று சிறுமியை கத்தியால் குத்தி கொடூரமாக கொன்றுவிட்டு உடலை ஏரிக்கரை அருகே போட்டுவிட்டு சென்றார்.
பிறகு காரில் அங்கிருந்து புறப்பட்ட ராஜ்குமார் தனது வீட்டிற்கு சென்றார். இரவு 11.20 மணியளவில் வீடடுக்கு போன ராஜ்குமார் அங்கு தூங்கி கொண்டிருந்த தனது மனைவியின் கழுத்தை அறுத்து கொலை செய்தார். அதேபோல் 2 மகன்களையும் தீர்த்து கட்டினார். 35 நிமிடத்தில் 6 பேரை கொன்றுள்ளார்.
ராஜ்குமார் தனது தந்தைக்கு போன் போட்டு நடந்த சம்பவத்தை கூறியுள்ளார். நான் மொத்தம் 6 பேரை கொன்றுவிட்டேன். இனி நானும் தற்கொலை செய்து போகிறேன் என்று கூறி காரில் ஏறி சென்றார். ராஜ்குமார் தற்கொலை செய்தாரா? இல்லையா? என்பது தெரியவில்லை. அவரை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. தனிப்படை போலீசார் அவரை தீவிரமாக தேடி வருகின்றனர்'' என்றனர்.
தற்போது 6 பேரை கொன்ற இந்த ராஜ்குமார் காதல் திருமணம் செய்தவர். இவரது மனைவி பெயர் பார்வதி சரிதா. இவருக்கு வயது 30. இவர்கள் 2 பேரும் கடந்த 2018 ம் ஆண்டில் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இந்த தம்பதிக்கு ஒரு மகள். 2 மகன்கள் பிறந்தனர். மகள் கைக்குழந்தையாக இருந்தேபோதே இறந்தார்.
இதனால் ராஜ்குமார் - பார்வதி சரிதா தம்பதி 2 மகன்களுடன் வசித்து வந்தனர். மூத்த மகனுக்கு வயது 4. இரண்டாவது மகன் வயது ஒன்று. இந்நிலையில் தான் கடந்த மே மாதம் ராஜ்குமார் 'போக்சோ' வழக்கில் சிக்கினார். அதன்பிறகு முன்ஜாமீன் பெற்ற நிலையில் நேற்று ஒரே இரவில் ராஜ்குமார் தனது மனைவி , 2 மகன்கள், தன்மீது பாலியல் புகார் அளித்த 17 வயது சிறுமி, அவரது தாய், பாட்டி என மொத்தம் 6 பேரை கொலை செய்த சம்பவம் தெலங்கானாவை நடுங்க வைத்துள்ளது.












Click it and Unblock the Notifications