சுனாமி நிவாரணம் என்ற பெயரில் மதமாற்றம்: விஎச்பி புகார்
நாகப்பட்டிணம்:
சுனாமி தாக்கப்பட்ட பகுதிகளில் நிவாரண உதவி என்ற பெயரில் மதமாற்றங்கள் நடந்து வருவதாக விஸ்வ இந்து பரிஷத் குற்றம்சாட்டியுள்ளது.
அந்த அமைப்பின் சார்பில் மீனவர்களுக்கு 10 பைபர் படகுகளை அதன் அகில உலகத் தலைவர் அசோக் சிங்கல் வழங்கினார்.பின்னர் அவர் பேசுகையில்,
சுனாமி பேரழிவு கலியுகம் தொடங்கிவிட்டதையே உணர்த்துகிறது.
சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்கள் துயரத்தில் இருக்கும்போது, ஒரு சிலர் மதமாற்ற வியாபாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதாகக் கூறி அவர்களை மதம் மாற்றிக் கொண்டிருக்கிறார்கள். எனவே இந்து அமைப்புகள்ஒன்றுபட வேண்டும்.
தூய்மையின் அடையாளமாகத் திகழும் மாதா அமிர்தனந்தமயி பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து ஆசி வழங்கியுள்ளார். இதுஅவர்கள் செய்த பாக்கியம் என்றார்.
முன்னதாக சென்னையில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், இந்துக்களை மிகவும் புண்படுத்தி விட்டார் ஜெயலலிதா.அவரது அரசுக்கு எதிராக மாபெரும் எதிர் பிரசார போராட்டத்தை மேற்கொள்ளவுள்ளோம்.
விரைவில் பிரசாரம் குறித்த விவரங்கள் அறிவிக்கப்படும். தமிழக அரசின் பொய்ப் பிரசாரங்களுக்கு பதிலடியாக இது அமையும்.
காவல்துறையினர் தங்களது எல்லையை மீறி நடந்து வருகின்றனர். நீதிமன்றங்கள் செய்ய வேண்டியவற்றையெல்லாம்இவர்களாகவே சட்ட விரோதமாக செய்து வருகிறார்கள் என்றார்.