சென்னை வந்த விமானத்தில் பயணி சாவு
சென்னை:
கொல்கத்தாவிலிருந்து சென்னை வந்த ஜெட் ஏர்வேஸ் விமானத்தில் 55 வயது பயணி மாரடைப்பால் இறந்தார்.
கொல்கத்தாவிலிருந்து ஜெட் ஏர்வேஸ் விமானம் நேற்றிரவு சென்னை வந்து கொண்டிருந்தது. அதில் குவஹாத்தியைச் சேர்ந்த தாஸ்ஷோபால் என்பவர் தனது மகனுடன் பயணித்தார்.
இதய நோய் உள்ள தாஸ் ஷோபால் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற வந்து கொண்டிருந்தார். சென்னைவிமான நிலையத்தை விமானம் நெருங்கிக் கொண்டிருந்தபோது ஷோபாலுக்கு நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து அவருக்கு விமானத்திலேயே முதலுதவி அளிக்கப்பட்டுள்ளது.
சென்னை விமானக் கட்டுப்பாட்டு அறையும் உஷார்படுத்தப்பட்டது. ஆம்புலன்ஸ், டாக்டர் ஆகியோர் தயார் நிலையில்வைக்கப்பட்டனர். இருப்பினும் விமானம் தரையிறங்கியவுடன் அவரைப் பரிசோதித்த டாக்டர்கள், ஏற்கனவே அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
இதைத் தொடர்ந்து பிரேதப் பரிசோதனைக்காக ஷோபாலின் உடல் சென்னை அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டது.