ஜெெ பிறந்த நாள் வளைவு: அரசியல்வாதிகளுக்கு நீதிபதி அறிவுரை
சென்னை:
அரசியல்வாதிகள், ஆடம்பர செலவுகளைத் தவிர்க்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு அறிவுரை கூறியுள்ளார்.
பெரம்பலூர் அருகே முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்த நாளையொட்டி அலங்கார வளைவு அமைக்கப்பட்டது. இதை எதிர்த்து பெரம்பலூர் ஊராட்சி கவுன்சிலர் அப்துல் பாரூக் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அந்த மனுவை உயர்நீதிமன்ற தனி நீதிபதி தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
இதை எதிர்த்து டிவிஷன் பெஞ்சில் பாரூக் அப்பீல் செய்தார். அந்த மனுவை தலைமை நீதிபதி கட்ஜு, நீதிபதி முருகேசன் ஆகியோர் விசாரணைக்கு எடுத்துக் கொண்டனர்.
விசாரணையின்போது அரசியல்வாதிகளுக்கு கட்ஜூ சில அறிவுரைகளை வழங்கினார்.
அவர் கூறுகையில், மக்கள் மனதில் இடம் பெற அரசியல்வாதிகள் முயல வேண்டும். அதை விடுத்து ஆடம்பர செலவுகளை அவர்கள் நாடக் கூடாது. சிலை வைப்பது, படம் திறப்பது போன்றவை வீண் செலவுகள். இதனால் மக்களுக்கு என்ன நன்மை என்பதை அரசியல்வாதிகள் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
மக்கள் நலனுக்குத்தான் அரசியல்வாதிகள் முக்கியத்துவம் கொடுக்க வேண்டுமே தவிர பிற விவகாரங்களில் அக்கறை செலுத்தக் கூடாது. மக்களுக்கு அவர்களால் இடையூறு நேரக் கூடாது.
உயர்நீதிமன்றக் கிளை திறப்புக்காக நான் மதுரை சென்றபோது 20 அடிக்கு ஒரு போலீஸ்காரர் நிறுத்தப்பட்டிருந்தார். இது தேவையற்றது. நான் உயர் அதிகாரியைத் தொடர்பு கொண்டு இவ்வாறு செய்யாதீர்கள், போலீஸ்காரர்களின் நேரத்தை வீணடிக்கக் கூடாது என்று அறிவுறுத்தினேன் என்றார் கட்ஜு.
பின்னர் வழக்கு விசாரணையை மார்ச் 1ம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்து உத்தரவிட்டார்.