சுனாமி: நாகை அரசு மருத்துவமனை ரூ. 10 கோடி செலவில் சீரமைப்பு
நாகப்பட்டினம்:
சுனாமி அலைகளால் கடுமையாக சேதமடைந்துள்ள நாகப்பட்டினம் அரசு மருத்துவமனையை சீரமைக்க ரூ. 10 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
டிசம்பர் 26ம் தேதி நடந்த சுனாமி அலைகளின் கொடூர தாக்குதலில் நாகை மாவட்டம் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டது. பல்லாயிரக்கணக்கானவர்கள் உயிரிழந்தனர், பல லட்சம் மதிப்புள்ள பொருட்கள் சேதமடைந்தன.
நாகை அரசு மருத்துவமனையும் மிகக் கடுமையாக சேதமடைந்தது. மருத்துவமனை முற்றிலும் சேதமடைந்துள்ளதால் அதை சீரமைக்க துரித கால நடவடிக்கையை அரசு அறிவித்துள்ளது.
இதுகுறித்து சுகாதாரத் துறை அமைச்சர் தளவாய் சுந்தரம் சென்னையில் செய்தியாளர்களிடம் கூறுகையில், நாகை மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை ரூ. 10 கோடி செலவில் முற்றிலும் புதுப்பிக்கப்படும். இந்தப் பணி இந்த ஆண்டு இறுதியில் முடிவுறும்.
இதற்குத் தேவையான நிதி, இயற்கை சீரழிவு மேலாண்மை நிதியிலிருந்தும், எம்.பிக்கள் நிதியிலிருந்தும் சேகரிக்கப்படும். அதேபோல, சாந்தி மோகன் அறக்கட்டளை என்ற தனியார் அறக்கட்டளை ரூ. 3 கோடி நிதியைத் தருகிறது.
இந்த நிதியில், மருத்துவமனையில் கூடுதலாக ஒரு பிரசவ வார்டு, குழந்தைகள் பராமரிப்பு வார்டு, மருத்துவமனைக்கு சுற்றுச் சுவர் ஆகியவை கட்ட சாந்தி மோகன் அறக்கட்டளை முன்வந்துள்ளது என்றார் தளவாய் சுந்தரம்.