தமிழர் கட்சி ஆதரவு வாபஸ்: இலங்கையில் ஆளும் கூட்டணி மெஜாரிட்டி இழப்பு
கொழும்பு:
இலங்கையில் ஆட்சியில் உள்ள அதிபர் சந்திரிகாவின் கூட்டணி அரசுக்கு அளித்து வந்த ஆதரவை தமிழர் கட்சியான இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் வாபஸ் பெற்றுள்ளது. இதனால் அரசு பெரும்பான்மையை இழந்துள்ளது.
இத் தகவலை அக் கட்சியின் மூத்த தலைவரும் எம்பியுமான ஆர்.யோகராஜன் தெரிவித்தார். இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கட்சிக்கு 8 எம்.பிக்கள் இருப்பது குறிப்பிடத்தக்கது.
அவர் கூறுகையில், கூட்டணியில் இருந்து நாங்கள் விலகிவிட்டோம். எங்களுக்குத் தந்த சில உறுதிமொழிகளை இந்த அரசு நிறைவேற்றவில்லை. இதனால் ஆதரவை வாபஸ் பெற்றோம் என்றார்.
நாடாளுமன்றத்தில் மொத்தமுள்ள 225 எம்பிக்களில் இப்போது சந்திரிகாவின் கூட்டணிக்கு வெறும் 111 உறுப்பினர்களின் ஆதரவே உள்ளது. இதனால் அரசு மெஜாரிட்டியை இழந்துவிட்டது.
தமிழ்த் தோட்டத் தொழிலாளர்களின் ஆதரவால் வென்று வரும் காங்கிரஸ் கட்சி, புலிகளுடனான அமைதிப் பேச்சுவார்த்தையை சந்திரிகா தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும் என்ற நிபந்தனையுடன் தான் கூட்டணியில் இடம் பெற்றது.
புலிகளுடன் அதிகாரப் பகிர்வை மேற்கொண்டால் ஆளும் கூட்டணியை விட்டு விலகுவோம் என இலங்கை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், கூட்டணியில் இருந்து இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் விலகியுள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications