நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் தொடக்கம்
டெல்லி:
பாகிஸ்தானுடன் சுமுகமான உறவு தொடரும் விதத்தில் பேச்சு வார்த்தைகள் நடத்தப்படும் என்று நாடாளுமன்ற கூட்டுக் கூட்டத்தில் ஜனாதிபதி அப்துல் கலாம் கூறினார்.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் இன்று தொடங்கியது.
இந்த ஆண்டின் முதல் கூட்டத் தொடர் என்பதால் இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் ஜனாதிபதி அப்துல் கலாம் உரையாற்றினார். அப்போது அவர் மத்திய அரசின் செயல் திட்டங்களைப் படித்தார்.
கலாம் பேசியதாவது:
இந்தியா, பாகிஸ்தான் இடையே நட்புறவை ஏற்படுத்த அனைத்து நடவடிக்கைளும் எடுக்கப்பட்டு வருகின்றன. இரு நாடுகளுக்கும் இடையே பஸ் போக்குவரத்தது மேலும் அதிகரிக்கப்படும்.
ஸ்ரீநகர் - முஸாபராபாத் இடையே பஸ் போக்குவரத்து நடத்த சமீபத்தில் இஸ்லாமாபாத்தில் ஒப்பந்தம் கையெழுத்தானது. மேலும் லாகூர்- அமிர்தசரஸ் இடையே பஸ் போக்குவரத்து நடத்துவது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது.
இது தவிர இரு நாடுகளிலும் உள்ள புண்ணிய ஸ்தலங்களுக்கு இடையே ரெயில் போக்குவரத்து நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
சமீபத்தில் தமிழ்நாடு, அந்தமான் தீவுகள், கேரளா உட்பட பல பகுதிகள் சுனாமி பேரலையால் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டன. இதில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிய அனைவருக்கும் இந்த அரசின் சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
ரஷ்யாவுடன் இணைந்து நாம் தயாரித்த பிரம்மோஸ் ரக ஏவுகணை வெற்றிகரமாக சோதித்துப் பார்க்கப்பட்டுள்ளது. சுமார் 290 கி.மீ. பாய்ந்து சென்று இலக்கை தாக்கக்கூடிய இந்த அதிநவீன ஏவுகணை விரைவில் நமது ராணுவத்தில் சேர்க்கப்பட உள்ளது என்றார் கலாம்.
இதன் பிறகு 2005-2006ம் ஆண்டுக்கான மத்திய அரசின் பொருளாதார ஆய்வறிக்கை இரு சபைகளிலும் தாக்கல் செய்யப்பட்டது.
நாளை ரயில்வே பட்ஜெட்டை அமைச்சர் லல்லு பிரசாத் யாதவ் தாக்கல் செய்கிறார்.
28-ந்தேதி மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் ப. சிதம்பரம் தாக்கல் செய்கிறார். அதில் வருமான வரி விலக்குக்கான உச்ச வரம்பு உயர்த்தப்படும் என்று தெரிகிறது.
கோவா அரசு டிஸ்மிஸ் விவகாரம், 3 மாநில தேர்தல் முடிவுகள் ஆகியவை இந்தக் கூட்டத் தொடரில் எதிரொலிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications