வங்கியிலிருந்து பணம் எடுக்க வரி: கருணாநிதி எதிர்ப்பு
சென்னை:
வங்கியிலிருந்து ஒரு நாளைக்கு ரூ. 10,000க்கு மேல் எடுத்தால் 10 ரூபாய் வரி செலுத்த வேண்டும் என்ற புதிய விதியை நீக்க வேண்டும்என்று திமுக தலைவர் கருணாநதி கோரிக்கை விடுத்துள்ளார்.
சென்னையில் அதிமுக அரசைக் கண்டித்து திமுக சார்பில் நடந்த பொதுக் கூட்டத்தில் கருணாநதி பேசுகையில், மத்திய பட்ஜெட்டில் ஒருநாளைக்கு ரூ. 10,000க்கு மேல் பணம் எடுத்தால் 0.01 சதவீதம் அதாவது 10 ரூபாய் வரி விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது நடுத்தர வகுப்பு மக்களை பாதிக்கும். வங்கியில் பணத்தைப் போட்டால் அதற்கு வட்டி கொடுக்க வேண்டியது வங்கிகள்தான். ஆனால்ஒருவர் தனது சொந்தப் பணத்தை எடுப்பதற்கு எதற்காக வட்டி கட்ட வேண்டும்?
கருப்புப் பணத்தை இது கட்டுப்படுத்த உதவும் என்று நிதியமைச்சர் ப.சிதம்பரம் சொல்வதை ஏற்க முடியாது. இப்படி வரி விதித்திருப்பதால்,கருப்புப் பணம் வைத்திருப்பவர்கள் இனி வங்கியில் டெபாசிட் செய்ய மாட்டார்கள். வேறு குறுக்கு வழிகளையே அவர்கள் தேடுவார்கள்.
இந்த புதிய வரி விதிப்பை ரத்து செய்ய வேண்டும் என்று சிதம்பரத்தை நான் கேட்டுக் கொள்கிறேன். சுனாமி நிவாரண நிதிக்கு பட்ஜெட்டில்ரூ. 10,000 கோடி ஒதுக்கியிருப்பது பாராட்டுக்குரியது.
வரும் சட்டசபைத் தேர்தலில் திமுக மற்றும் கூட்டணிக் கட்சிகள் மாபெரும் வெற்றி பெற்று, திமுக மீண்டும் ஆட்சிக்கு வர தொண்டர்கள்இப்போதே தயாராக வேண்டும்.
இன்னும் ஆறு மாதம் அல்லது ஒரு வருடத்தில் தேர்தல் வரலாம். எனவே திமுக மற்றும் கூட்டணிக் கட்சித் தொண்டர்கள் தேர்தலுக்குஇப்போதே தயாராக வேண்டும்.
சுனாமி பாதித்த பகுதிகளுக்கு திமுக தொண்டர்கள் சென்று அங்குள்ள மக்களின் குறைகளைத் தீர்க்க வேண்டும் என்றார் கருணாநிதி.
ராமதாஸ்-வைகோவும் எதிர்ப்பு:
வங்கியிலிருந்து பணம் எடுத்தால் வரி கட்ட வேண்டும் என்ற அறிவிப்புக்கு, பாமக நிறுவனர் ராமதாஸ், மதிமுக பொதுச் செயலாளர்வைகோ ஆகியோரும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.