ஜார்க்கண்ட் முதல்வராக பதவியேற்றார் சிபு சோரன்
ராஞ்சி:
ஆட்சியமைக்க தங்களுக்கு போதிய பெரும்பான்மை உள்ளதாக பாஜக-ஐக்கிய ஜனதா தளக் கூட்டணி கூறி வரும் நிலையில், ஜார்க்கண்ட்மாநில முதல்வராகப் பதவியேற்குமாறு ஜார்க்ண்ட் முக்தி மோச்சா தலைவர் சிபு சோரனுக்கு அம் மாநில ஆளுநர் அழைப்பு விடுத்தார்.
இதையடுத்து அவர் முதல்வராகப் பதவியேற்றுக் கொண்டார். அவரை எதிர்த்து கட்சியை விட்டு வெளியேறி சுயேச்சையாக நின்றுபோட்டியிட்டு வென்ற ஸ்டீபன் மராண்டி துணை முதல்வராகப் பொறுப்பேற்றுக் கொண்டார். மேலும் 5 அமைச்சர்களும் பதவியேற்றனர்.
காங்கிரஸ்-ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா- லாலுவின் ராஷ்ட்ரீய ஜனதா தளம் கூட்டணி சார்பில் அவர்கள் பதவியேற்றனர்.
அரசியல் சட்டத்தின் 164(1)வது பிரிவின் கீழ் ஆட்சியமைக்க சோரனுக்கு உத்தரவிட்டுள்ளதாகவும், அவர் சட்டசபையில் வரும் 21ம்தேதிக்குள் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்றும் ஆளுநர் சையத் ராஸி வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார்.
சுயேச்சைகளுக்கு வலை:
இதற்கு பா.ஜ.க. கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளது.
முன்னதாக தங்களை ஆட்சிமைக்க ஆளுநர் அழைக்காவிட்டால் 41 எம்.எல்.ஏக்களையும் டெல்லி அழைத்துச்சென்று ஜனாதிபதி முன் நிறுத்துவோம் என்று பாரதிய ஜனதா எச்சரித்திருந்தது.
இங்கு ஆட்சியமைக்க மொத்தம் 41 இடங்கள் தேவை. இதில் பா.ஜ.க-ஐக்கிய ஜனதா தளக் கூட்டணி 36இடங்களை கைப்பற்றியுள்ளது. பா.ஜ.க. தனித்து 30 தொகுதிகளிலும், ஐக்கிய ஜனதா தளம் 6 தொகுதிகளிலும்வெற்றி பெற்றுள்ளது.
காங்கிரஸ், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கூட்டணி 26 தொகுதிகளிலும், லாலுவின் ராஷ்ட்ரீய ஜனதா தளம் 7தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளன. சுயேச்சைகள் 12 இடங்களில் வென்றுள்ளனர்.
தங்களுக்கு ஆட்சியமைக்க 5 எம்.எல்.ஏக்களே தேவைப்படுவதால் சுயேச்சைகள் 5 பேருக்கு பா.ஜ.க வலைவீசியது. அவர்களும் பா.ஜ.கவுக்கு ஆதரவு தெரிவித்தனர்.
41, 42..
இதைத் தொடர்ந்து தங்களுக்கு 41 எம்.எல்.ஏக்களின் ஆதரவு இருப்பதால் தங்களை ஆட்சியமைக்க அழைக்கவேண்டும் என்று அம் மாநில ஆளுநர் சையத் ராஸியிடம் பாஜக கோரிக்கை விடுத்தது. 41 எம்எல்ஏக்களையும்அவர் முன் ஆஜர்படுத்தியது.
ஆனால், தங்களுக்கு 42 எம்.எல்.ஏக்களின் ஆதரவு இருப்பதாக காங்கிரஸ்-சிபுசோரன் கூட்டணி கூறியது.
ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சாவில் இருந்து பிரிந்து தனியாக போட்டியிட்டு வெற்றி பெற்ற சுயேச்சை எம்எல்ஏவானஸ்டீபன் மராண்டியுடன் சென்று, கவர்னரை சந்தித்தார் சிபு சோரன்.
இதையடுத்து சுயேச்சை எம்.எல்.ஏ.க்கள் 12 பேரையும் நேரில் அழைத்து அவர்களிடம் பேசிய பிறகேஆட்சியமைக்க யாரை அழைப்பது என்பது குறித்துத் தீர்மானிக்கப் போவதாக கவர்னர் ராஸி தெரிவித்தார்.இதையடுத்து அவர்களை தனித்தனியே அழைத்துப் பேசினார்.
சோரனுக்கு அழைப்பு:
இதைத் தொடர்ந்து பா.ஜ.கவுக்குப் பதிலாக சோரனை ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு விடுத்தார்.
இதை பா.ஜ.க மிகக் கடுமையாகக் கண்டித்துள்ளது. ஜனநாயகப் படுகொலை செய்த ஆளுநரை நீக்க வேண்டும் எனஅக் கட்சியின் தலைவர் அருண் ஜேட்லி கோரியுள்ளார்.
முன்னதாக, நாடாளுமன்றத்திலும் இந்த விவகாரம் வெடித்தது. காங்கிரசுக்கு ஆதரவாக ஆளுநர்செயல்படுவதாகவும், தங்களை ஆட்சியமைக்க அழைக்காமல் வேண்டுமென்றே ஆளுநர் காலதாமதம்செய்வதாகவும் கூறி மக்களவையிலும் மாநிலங்களவையிலும் கட்சியின் தலைவர் அத்வானி தலைமையில் பாஜகஎம்பிக்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
இதையடுத்து அமளி, துமளி ஏற்பட்டதால் இரு அவைகளும் ஒத்தி வைக்கப்பட்டன.
பிரதமர் மன்மோகன் சிங், சோனியா காந்தி, ஆளுநர் ராஸி ஆகியோர் கூட்டு சேர்ந்து தான் ஜார்க்கண்ட்டில் பாஜகஆட்சி வர விடாமல் தடுத்துவிட்டதாக பாஜக குற்றம் சாட்டியுள்ளது.
உதவிய லாலு:
காங்கிரஸ்-ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கூட்டணி ஆட்சியமைக்க ராஷ்ட்ரீய ஜனதா தளத் தலைவர் லாலு பிரசாத்பெருமளவில் உதவியுள்ளதாகத் தெரிகிறது.
சிபு சோரனை எதிர்த்து தனியாகப் போட்டியிட்டு வென்ற சுயேச்சை எம்எல்ஏ ஸ்டீபன் மராண்டியை லாலு தான்இந்தக் கூட்டணி பக்கம் இழுத்துள்ளார்.
துணை முதல்வர் பதவி வாங்கித் தருவதாகக் கூறி அவரை நான் தான் காங்கிரஸ் கூட்டணிக்கு இழுத்து வந்தேன்என பாட்னாவில் இன்று லாலு தெரிவித்தார்.
மராண்டியோடு மேலும் சில சுயேச்சைகளும் இந்தக் கூட்டணி பக்கம் வருவார்கள் என்று தெரிகிறது.