பாஜகவுக்கு எதிராக ராகுல் காந்தி தர்ணா
டெல்லி:
ஏதாவது ஒரு காரணத்தைச் சொல்லி நாடாளுமன்றத்தை நடத்த விடாமல் பாஜகவினர் தொடர்ந்து முடக்கி வருவதாகக் கூறியும் அதைகண்டித்தும் ராகுல் காந்தி இன்று நாடாளுமன்றத்தின் வெளியே தர்ணா போராட்டத்தில் இறங்கினார்.
நாடாளுமன்ற வாயிலில் சுமார் 20 காங்கிரஸ் எம்பிக்களுடன் ராகுல் காந்தி தர்ணா நடத்தினார்.
சமீப காலமாகவே நாடாளுமன்றத்தில் எதிர்க் கட்சிகள் அமளி செய்வதும், இதனால் தினமும் அவை கூடியதும் நாள் முழுக்க ஒத்திவைக்கப்படுவதுமாக நாட்கள் கழிந்து வருவது குறிப்பிடத்தக்கது.
இந் நிலையில் ஜார்க்கண்ட் விவகாரத்தை வைத்து பா.ஜ.க கூட்டணி அமளி செய்ததால் இன்றும் அவை ஒத்தி வைக்கப்பட்டது.
இதை எதிர்த்து ராகுல் தர்ணாவில் ஈடுபட்டார். அப்போது நிருபர்களிடம் அவர் கூறியதாவது:
என்னைப் போன்ற இளைய எம்பிக்கள் நாடாளுமன்ற விவாதங்கள் மூலம் நிறைய கற்கவும் மக்களுக்கு உழைக்கவும் ஆசைப்படுகிறோம்.ஆனால், அதற்கான வாய்ப்பையே தர மறுக்கிறார்கள்.
நாடாளுமன்றத்தை முடக்குவதால் என்ன லாபம்? இதனால் மக்களின் வரிப் பணமும் காலமும் தான் வீணாகிறது. ஜனநாயகத்தின்கோவிலான நாடாளுமன்றத்தை செயல்பட விடுங்கள் என எதிர்க் கட்சிகளை கேட்டுக் கொள்கிறேன். இந்தக் கோவிலை அவமதிக்காதீர்கள்.
நாடாளுமன்றம் முடக்கப்பட்டதால் கடந்த இரு நாட்களில் மட்டும் நாட்டுக்கு ரூ. 52 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. இது யாருடைய பணம்?.இரு நாட்கள் அவையை நடத்த இவ்வளவு செலவாகிறது. அதை வீணாக்கி அழிக்கலாமா என்று கேட்டார் ராகுல்.
ராகுலின் இந்தப் போராடத்தை மிகப் பெரிய ஜோக் என பாஜக வர்ணித்துள்ளது.
சமீப காலமாக காங்கிரசில் ராகுலுக்கு அதிக முக்கியத்துவம் தரப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.