சொத்து குவிப்பு வழக்கு: ஜெ.வுக்கு வாதாட கர்நாடக முன்னாள் அமைச்சர்?
பெங்களூர்:
சொத்துக் குவிப்பு வழக்கில் தனது சார்பாக வாதாட கர்நாடக முன்னாள் சட்டத்துறை அமைச்சரும், பிரபல வழக்கறிஞருமானஎம்.சி.நானய்யாவை முதல்வர் ஜெயலலிதா தரப்பு அணுகியுள்ளதாக கூறப்படுகிறது.
ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கு பெங்களூர் தனி நீதிமன்றத்தில் வரும் 14ம் தேதி தொடங்கவுள்ளது. விசாரணைக்கு வரச்சொல்லி ஜெயலலிதா, உடன் பிறவா சகோதரி சசிகலா, அவரது உறவினர் இளவரசி, முன்னாள் வளர்ப்பு மகன் சுதாகரன், பெரியகுளம்முன்னாள் எம்.பி. டி.டி.வி. தினகரன் ஆகியோருக்கு தனி நீதிபதி பச்சாப்புரே நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
இந்த வழக்கில் அரசுத் தரப்பில் வாதாட வழக்கறிஞராக பி.வி.ஆச்சார்யா நியமிக்கப்பட்டுள்ளார். ஏதாவது பிரஷ்ஸர் வந்தால் பதவிவிலகிவிடுவேன் என்று கர்நாடக முதல்வர் தரம்சிங்கிடம் திட்டவட்டமாகக் கூறிவிட்டுத் தான் இந்தப் பதவியை ஏற்றார் ஆச்சார்யா.
தமிழ் தெரிந்த ஆச்சார்யா மிகவும் மதிக்கப்படும் மூத்த வழக்கறிஞராவார்.
ஆனால், ஜெயலலிதாவின் தரப்பில் யார் வாதாடப் போகிறார்கள் என்பதில் பெரும் பரபரப்பு நிலவுகிறது. கர்நாடகாவைச் சேர்ந்த மூத்தவழக்கறிஞராகவும் அதே நேரத்தில் அரசியல் பின்பலமும் கொண்ட ஒருவரை வழக்கறிஞரைப் போட்டால் நல்லது என்று ஜெ. தரப்பு முடிவுசெய்துள்ளது.
இதையடுத்து முன்பு ஜனதா தளம் ஆட்சியில் அம் மாநிலத்தில் சட்ட அமைச்சராக (ஜே.எச்.பாட்டீல் முதல்வராக இருந்தபோது) இருந்தஎம்.சி.நானய்யாவை ஜெயலலிதா தரப்பு அணுகியுள்ளது.
மடிகேரியைச் சேர்ந்த நானய்யா சிறந்த சட்ட நிபுணர், ஜனதா தளத்தின் மூத்த தலைவர்.
இவர் அரசு வழக்கறிஞராக நியமிக்கப்பட்டுள்ள பி.வி.ஆச்சார்யா விட சீனியர் வழக்கறிஞராவார்.
1994ம் ஆண்டு வரை வழக்கறிஞராகப் பணியாற்றி வந்த இவர், 94ல் தீவிர அரசியலில் இறங்கியதால் வழக்கறிஞர் தொழிலைகைவிட்டார்.
ஜெயலலிதா தரப்புக்கு நானய்யா இதுவரை சம்மதம் தெரிவிக்கவில்லை என்றே கூறப்படுகிறது.