சென்னையின் பிரபல ரெளடி "பங்க்" குமார் கைது
சென்னை:
சென்னையைச் சேர்ந்த பயங்கர ரெளடியான பங்க் குமார் திடீரென கைது செய்யப்பட்டான்.
ஏராளமான கொலை, கொலை மிரட்டல், கடத்தல், பணம் பறித்தல், அடிதடி வழக்குகளில் தொடர்புடையவன் பங்க் குமார். 3 முறை குண்டர்சட்டத்திலும் கைது செய்யப்பட்டு சிறை வாசம் அனுபவித்தவன்.
இப்போது பாமகவில் இருக்கும் இவன், அடுத்தடுத்து வந்த அதிமுக, திமுக ஆட்சியில் முக்கிய புள்ளிகளை கவனிக்கும் விதத்தில் கவனித்துவந்ததால் எண்கெளன்டர் போன்றவற்றில் இருந்து தப்பி வருகிறான்.
தி.நகர் பாண்டி பஜார் அருகே குடிசைகளில் வசிப்போரை அங்கிருந்து காலி செய்யுமாறு கூறி பங்க் குமார் மிரட்டி வந்துள்ளான். ஒருதொழிலதிபரிடம் காசு வாங்கிக் கொண்டு இந்த வேலையை அவன் செய்தான்.
இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்தவர்கள் மாம்பலம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்திருந்தனர்.
இந் நிலையில் வியாழக்கிழமை இரவு குடிசைப் பகுதிகளுக்கு வந்த குமார், அங்கிருந்தவர்களை மிரட்டி, உடனே காலி செய்யாவிட்டால்ஒருவரையும் உயிருடன் விட மாட்டேன் என்று எச்சரித்தான்.
இதையடுத்து அவனுக்கு எதிராக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தொண்டர்கள் திரண்டனர்.
நிலைமை கை மீறிப் போனதையடுத்து மாம்பலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் மோகன் குமார் தலைமையிலான போலீஸ் படை விரைந்துவந்தது. போலீஸாரைப் பார்த்ததும் பங்க் குமார் ஓட முயன்றான். ஆனால் போலீஸார் அவனை அமுக்கிப் பிடித்தனர்.
அவனைப் பிடிக்க முயன்றபோது இன்ஸ்பெக்டர் மோகன் குமாருக்கு லேசான காயம் ஏற்பட்டது.