ஜெவுக்கு பாதுகாப்பு: பெங்களூரில் அதிகாரிகள் ஆலோசனை
பெங்களூர்:
சொத்துக் குவிப்பு வழக்கில் ஆஜராவதற்காக முதல்வர் ஜெயலலிதா பெங்களூர் வந்தால், அவருக்கு கொடுக்கப்பட வேண்டிய பாதுகாப்புகுறித்து கர்நாடக மாநில காவல்துறை அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர்.
பெங்களூர் சிட்டி சிவில் நீதிமன்ற வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள தனி நீதிமன்றத்தில் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்குவருகிற 14ம் தேதி விசாரணைக்கு வருகிறது. அன்றைய தினம் விசாரணையில் ஆஜராகுமாறு கூறி ஜெயலலிதா, சசிகலா, இளவரசி,டி.டி.வி.தினகரன், சுதாகரன் உள்ளிட்டோருக்கு தனி நீதிமன்றம் ஏற்கனவே உத்தரவிட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து பாதுகாப்பு தொடர்பான ஆலோசனைகளில் கர்நாடக காவல்துறை மற்றும் சட்டத்துறை அதிகாரிகள் இறங்கியுள்ளனர்.கருப்புப் பூனைப் படை பாதுகாப்புப் பிரிவில் ஜெயலலிதா இருப்பதால் அவருக்கு அதிகபட்ச பாதுகாப்பை அளிக்க கர்நாடககாவல்துறையினர் முடிவு செய்துள்ளனர்.
விமான நிலையத்திலிருந்து நீதிமன்றம் வரை ஜெயலலிதாவுக்குக் கொடுக்கப்பட வேண்டிய பாதுகாப்பு குறித்து அதிகாரிகள் ஆலோசனைநடத்தினர். எந்த வழியாக ஜெயலலிதாவை அழைத்து வருவது, போக்குவரத்து நெரிசலை எப்படிச் சமாளிப்பது என்பது உள்ளிட்டஅம்சங்கள் குறித்தும் விவாதிக்கப்பட்டதாகத் தெரிகிறது.
இதற்கிடையே, நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள 14ம் தேதி ஜெயலலிதா பெங்களூர் வருவாரா என்பதில் சந்தகேம் எழுந்துள்ளது. காரணம்,தமிழக சட்டசபையின் பட்ஜெட் கூட்டத் தொடர் தற்போது நடந்து கொண்டுள்ளது. ஏப்ரல் மாதம் வரையிலும் கூட்டத் தொடர் நடைபெறும்.எனவே நீதிமன்ற உத்தரவுப்படி ஜெயலலிதா ஆஜராவாரா என்பதில் குழப்பம் ஏற்பட்டுள்ளது.
இதற்கிடையே முன்னாள் வளர்ப்பு மகன் சுதாகரனின் வழக்கறிஞர் சரவணக்குமார், பெங்களூர் தனி நீதிமன்றத்தை பார்வையிட்டுச்சென்றார்.