ஜார்க்கண்ட் ஆளுநருக்கு எதிராக பாஜக வழக்கு
டெல்லி:
ஜார்க்கண்டில் சிபுசோரனை ஆட்சியமைக்க ஆளுநர் அழைத்ததை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் பாஜக வழக்குத் தொடர்ந்துள்ளது.
81 பேர் கொண்ட சட்டசபையில் தங்களுக்கு 41 எம்எல்ஏக்களின் ஆதரவு இருந்தும் தங்களை ஆட்சியமைக்க அழைக்காமல், ஜார்க்கண்ட்முக்தி மோர்ச்சா-காங்கிரஸ் கூட்டணியை ஆட்சியில் அமர்த்திய ஆளுநர் சையத் ராஸியை பாஜக கடுமையாக விமர்சித்து வருகிறது.
அவரை சுபாரி கில்லர் (பணத்துக்கு கொலை செய்யும் கூலியாள்) என பாஜக தலைவர் அத்வானி விமர்ச்சித்துள்ளார்.
ஆளுநரின் செயலால் அதிருப்தியடைந்த ஜனாதிபதி கலாம் அவரை நேரில் அழைத்துப் பேசினார். இதையடுத்து பெரும்பான்மையைநிரூபிக்க 21ம் தேதி வரை தரப்பட்ட கால அவகாசத்தை ஒரு வாரம் குறைத்தார் ஆளுநர்.
அதன்படி, வரும் 15ம் தேதி சிபுசோரன் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும்.
இதற்கிடையே தனது எம்எல்ஏக்களையும் தனக்கு ஆதரவு தெரிவித்த 5 சுயேச்சை எம்எல்ஏக்களையும் காங்கிரஸ்-சிபு சோரன் கூட்டணிவிலைக்கு வாங்கிவிடாமல் தடுக்க அவர்களை புனிதப் பயணம் அழைத்துச் சென்றுள்ளது பாஜக.
வட நாட்டுக் கோவில்கள் மற்றும் பல்வேறு சுற்றுலாத் தலங்களுக்கு அவர்கள் பலத்த பாதுகாப்புடன் அழைத்துச் செல்லப்பட்டு வருகின்றனர்.இதனால் மற்ற 40 எம்எல்ஏக்களின் ஆதரவு மட்டுமே சிபு சோரனுக்குக் கிடைத்துள்ளது. இன்னும் ஒரு எம்எல்ஏவின் ஆதரவுகிடைக்காவிட்டால் மெஜாரிட்டியை நிரூபிக்க முடியாமல் போய்விடும்.
இதற்கிடையே பாஜகவுடன் புனிதப் பயணத்தில் உள்ள இரு சுயேச்சை எம்எல்ஏக்களான ஹரி நாராயண் ராய், இனோஸ் எக்காஆகியோரின் குடும்பத்தினர், அந்த இருவரையும் பாஜக கடத்திச் சென்றுவிட்டதாக புகார் கூறியுள்ளனர்.
இந் நிலையில் சிபு சோரனை ஆட்சியமைக்க அழைத்த ஆளுநரின் செயல் சட்ட விரோதமானது என்று கூறியும், தனக்கு 41எம்எல்ஏக்களின் ஆதரவு உள்ளதால் தன்னையே ஆட்சியமைக்க அழைக்க வேண்டும் என்று கோரியும் உச்ச நீதிமன்றத்தில் இன்று முன்னாள்ஜார்க்கண்ட் பாஜக முதல்வர் அர்ஜூன் முண்டா வழக்குத் தொடர்ந்துள்ளார்.
மேலும் சட்டசபையில் சிபு சோரன் பெரும்பான்மையை நிரூபிக்கும்போது, முறைகேடு நடக்காமல் தடுக்க ஒரு நீதிபதியை பார்வையாளராகநியமிக்க வேண்டும் என்றும் கோரியுள்ளார்.
இந்த வழக்கு வரும் புதன்கிழமை விசாரணைக்கு வருகிறது.












Click it and Unblock the Notifications