ஸ்டாலினை கொல்ல சதி: திமுக குற்றச்சாட்டு
கடலூர்:
திமுக துணைப் பொதுச்செயலாளர் செயலாளர் மு.க.ஸ்டாலினை கொல்ல சதித் திட்டம் தீட்டப்பட்டுள்ளது என்றுஆற்காடு வீராசாமி பரபரப்பு குற்றம் சாட்டினார்.
கடலூரில் திமுக சார்பில் அதிமுக அரசைக் கண்டித்து பொதுக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் ஆற்காடுவீராசாமி பேசுகையில்,
அதிமுக அரசு பட்ஜெட்டை அறிவித்துள்ளது. அதில் பொது மக்களுக்கு, படித்த இளைஞர்களுக்கு தேவையானஎந்த திட்டமும் இல்லை. சாலைப் பணியாளர்கள், மக்கள் நலப் பணியாளர்களுக்கு வேலை வழங்கப்படவில்லை.திமுக அரசால் அரசு ஊழியர்களுக்கு வழங்கப்பட்ட சலுகை பறிப்பு குறித்து அறிவிப்பு எதுவும் இல்லை.
ஆனால் வரி இல்லாத பட்ஜெட் என்று கூறுகிறார்கள். ஒரு அரசை நடத்த மக்களின் வரிப் பணம் அவசியம். அப்படிஇருக்கும்போது வரி இல்லாத பட்ஜெட் என்று எப்படி கூற முடியும்?
அதிமுக அரசில் எல்லாத் துறைகளிலும் லஞ்சம் தலைவிரித்தாடுகிறது. அத்துடன் திமுக முன்னாள் அமைச்சர்கள்மீது சொத்துக்குவிப்பு என்று பொய் வழக்கு போடுகிறார்கள். இதுவரை எந்த வழக்கிலும் குற்றப்பத்திரிகை தாக்கல்செய்யப்படவில்லை.
திமுக-காங்கிரஸ் உறவை உடைக்க இளங்கோவன் பெயரில் போலீஸை விட்டு போஸ்டர்கள் ஒட்டினார்கள்.அதுவும் நடக்கவில்லை.
இப்போது திமுக துணைப் பொதுச்செயலாளர் மு.க. ஸ்டாலினை கொலை செய்ய கடலூர் சிறையில் குண்டர்சட்டத்தில் அடைக்கப்பட்டுள்ள ஒருவரைக் கொண்டு சதி நடக்கிறது. எனவே கடலூர் திமுகவினர் விழிப்புடன்இருக்கவேண்டும் என்றார்.