"ரூட்டை"மாற்றினார் நாச்சியப்பன்: ஜெ. மீது திடீர் பாய்ச்சல்
டெல்லி:
முதல்வர் ஜெயலலிதா சர்வாதிகாரப் போக்குடன் நடந்து வருகிறார். அவரை கண்டித்து தமிழக சட்டசபை முன் போராட்டம் நடத்தப்போகிறோம் என காங்கிரஸ் எம்.பி. சுதர்சன நாச்சியப்பன் அறிவித்துள்ளார்.
தமிழகத்தில் கூட்டணி ஆட்சி அமைக்க வேண்டும் என்று ஈ.வி.கே.எஸ். இளங்கோவனுக்கும் முன்பாக முதலில் குரல் கொடுத்தவர்நாச்சியப்பன் தான். அதை வழிமொழிந்தவர் தான் இளங்கோவன்.
இளங்கோவனுக்கு கட்சி மேலிடமும், திமுக தலைமையும் ஆப்பு வைத்ததும் குரலைச் சுருட்டிக் கொண்டு அமைதியாகிவிட்டார்.நாச்சியப்பனிடம் இருந்தும் சத்தமே வரவில்லை, ஒரேயடியாக அமைதியாகிவிட்டார்.
இந் நிலையில் ஜெயலலிதா மீது திடீரென பாய்ந்துள்ளார் நாச்சியப்பன். டெல்லியில் இன்று அவர் வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில்,
பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் நாடாளுமன்ற நடவடிக்கைகளை முற்றிலும் ஸ்தம்பிக்க வைப்பதிலேயே தங்களது முழு நேரத்தையும்செலவிடுகிறார்கள். அவர்களது போக்கினால் இதுவரை ரூ. 84 கோடி வரை இழப்பு ஏற்பட்டுள்ளது. இவை யாவும் மக்களுடைய வரிப்பணமாகும்.
பாஜகவினரின் போக்கைக் கண்டித்து நாடாளுமன்றம் முன் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தலைமையில் இளம் எம்.பிக்கள் தர்ணாபோராட்டம் நடத்தியுள்ளனர். பாஜக ஆளும் கட்சியாக இருந்தபோது சர்வாதிகாரப் போக்குடன் நடந்து கொண்டதை மக்கள் இன்னும்மறக்கவில்லை.
இப்போது எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்திருக்கும்போதும் அதே மனப்பான்மையுடன் நடந்து கொள்கின்றனர்.
இதேபோல தமிழகத்திலும் முதல்வர் ஜெயலிதாவின் சர்வாதிகாரப் போக்கினால் தமிழக சட்டமன்ற நடவடிக்கைகளும் பாதிக்கப்படுகின்றன.எதிர்க்கட்சியினரைப் பேசக் கூட விடாமல் தடித்த வார்த்தைகளால் விமர்சிப்பதும், வசை பாடுவதுமாக சட்டசபையை தனது சொந்த கட்சிஅலுவலகம் போல மாற்றி வருகிறார் ஜெயலலிதா.
சோனியா காந்தி குறித்து முன்பு கூறிய கருத்துக்களில் மாற்றம் இல்லை என்று கூறி தனது அகங்காரம் இன்னும் குறையவில்லை என்பதைநிரூபித்துள்ளார் ஜெயலலிதா.
தொடர்ந்து அன்னை சோனியா காந்தியை அவதூறாக அவர் பேசி வருவாரானால், தமிழக காங்கிரஸ் மனித உரிமைப் பிரிவுதொண்டர்களையும், மக்களையும் திரட்டி எனது தலைமையில் சர்வாதிகாரத்தின் மொத்த உருவமாகத் திகழும் ஜெயலலிதாவை எதிர்த்துசட்டசபை முன்பு மறியல் போராட்டம் நடத்த வேண்டியிருக்கும் என்று தெரிவித்துக் கொள்கிறேன் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்நாச்சியப்பன்.