யாருக்கும் கட்டுப்படாத திமுக: ஜெ. விளாசல்
சென்னை:
சட்டசபையில் யாருக்கும் கட்டுப்படாமல் திமுக எம்.எல்.ஏக்கள் நடந்து கொள்கிறார்கள். அவர்களது "குட்டித்தலைவர்" ஸ்டாலினுக்குக் கூட அவர்கள் கட்டுப்படுவதில்லை என்று முதல்வர் ஜெயலலிதா கூறினார்.
இலங்கைக்கு சென்ற இந்திய அமைதி காக்கும் படை குறித்து கருணாநிதி முன்பு தெரிவித்த கருத்துக்கள் குறித்துமுதல்வர் ஜெயலலிதா கூறிய சில கருத்துக்களால் ஆவேசப்பட்ட திமுக எம்.எல்.ஏக்கள் சட்டசபையில் ரகளையில்ஈடுபட்டனர்.
இதையடுத்து அனைவரையும் கூண்டோடு வெளியேற்ற சபாநாயகர் காளிமுத்து உத்தரவிட்டார்.
அனைவரும் வெளியேற்றப்பட்ட பிறகு முதல்வர் ஜெயலலிதா பேசுகையில்,
ஒவ்வொரு கட்சியினரும் தங்களது தலைவருக்குக் கட்டுப்படுகிறார்கள். காங்கிரஸ் உறுப்பிர்கள் எஸ்.ஆர்.பி.பேச்சுக்குக் கட்டுப்படுகிறார்கள். பாமக உறுப்பினர்கள் ஜி.கே.மணியின் பேச்சைக் கேட்கிறார்கள். ஆனால் திமுகஉறுப்பினர்களை யாராலும் கட்டுப்படுத்த முடியவில்லை.
அவர்களுடைய தலைவர் (கருணாநிதி) சட்டசபைக்கே வருவதில்லை. பேரவையின் எதிர்க்கட்சித் தலைவரும்(அன்பழகன்) பெரும்பாலும் பேரவைக்கு வருவதில்லை.
அவர்களது "குட்டித் தலைவர்" ஸ்டாலின் அவைக்கு வந்தும், பேசாமல் இருக்கிறார். வம்பு செய்யும் தனது கட்சிஉறுப்பினர்களை அவர் கட்டுப்படுத்த முயற்சிப்பதில்லை.
அவர்களது துணைத் தலைவரோ (துரைமுருகன்) தவறாமல் வருகிறார். அவராலும் திமுகவினரை கட்டுப்படுத்தமுடியவில்லை. பேரவைத் தலைவராலும் அவர்களைக் கட்டுப்படுத்த முடியவில்லை.
இப்படி யாருக்கும் கட்டுப்படாதவர்களாக திமுகவினர்கள் இருக்கிறார்கள். இவர்களை எங்களால் கட்டுப்படுத்தமுடியும் என்று எதிர்க்கட்சித் தலைவர்கள் யாராவது உத்தரவாதம் கொடுத்தால் அவர்களை மீண்டும் அவைக்குள்அனுமதிக்கலாம் என்றார் ஜெயலலிதா.
அப்போது பேசிய ஹேமச்சந்திரன் (மார்க்சிஸ்ட் கம்யூ), நாடாளுமன்றத்தில் இது மாதிரியான பிரச்சினைஏற்படும்போது அவையை சிறிது நேரத்திற்கு ஒத்திவைப்பார்கள். அதுபோல இங்கும் முயற்சிக்கலாம் என்றார்.
இதற்கு பதிலளித்த ஜெயலலிதா, மக்களுக்கும், மத்திய அரசுக்கும் நேரடித் தொடர்பு இல்லை. எனவே எத்தனைமணி நேரத்திற்கு வேண்டுமானாலும், எத்தனை நாட்கள் வேண்டுமானாலும் நாடாளுமன்றத்தை ஒத்திவைக்கலாம்.ஆனால் மாநில அரசை மக்கள் கேள்வி கேட்பார்கள். இவர்களது பிரச்சினைக்காக மக்கள் பணத்தை நாம் வீணாக்கமுடியாது என்றார்.