கும்பகோணம் பள்ளிக்கு பெற்றோர்கள் மிரட்டல்!
கும்பகோணம்:
94 குழந்தைகளின் உயிர்களைக் குடித்த கும்பகோணம் ஸ்ரீகிருஷ்ணா பள்ளியை மீண்டும் திறந்தால் வெடிகுண்டு வைத்துத் தகர்ப்போம் என மிரட்டல்விடுக்கப்பட்டுள்ளது.
கும்பகோணம் காசிராமன் தெருவில் உள்ள ஸ்ரீகிருஷ்ணா பள்ளியில் ஏற்பட்ட பெரும் தீ விபத்தில் 94 பிஞ்சுக் குழந்தைகள் கருகி இறந்தன. இந்ததுயரச் சம்பவத்திற்குப் பிறகு பள்ளிக் கூடம் பூட்டப்பட்டு சீல் வைக்கப்பட்டு விட்டது.
அப் பகுதியைச் சேர்ந்தவர்கள் பள்ளியை நினைவுச் சின்னமாக மாற்ற வேண்டும் என்று கோரி வருகின்றனர். கும்பகோணத்திற்கு வருவோர் அந்தப்பள்ளியை வந்து பார்வையிட்டுச் செல்கிறார்கள்.
இந் நிலையில் பள்ளியை மீண்டும் திறக்க முயற்சிகள் நடப்பதாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து பள்ளியின் இரும்புக் கதவில் சில நோட்டீஸ்கள் ஒட்டப்பட்டுள்ளன.
அதில், ஸ்ரீகிருஷ்ணா பள்ளி தாளாளர் புலவர் பழனிச்சாமிக்கு போர் எச்சரிக்கை, நீ புத்திசாலித்தனமாக மீண்டும் பள்ளியைத் துவக்கி விடலாம் என்றுகனவு காணாதே.
இந்தப் பள்ளியில் உள்ள ஒவ்வொரு செங்கல்லிலும் எங்கள் பிள்ளைகளின் அலறல் சத்தம் தான் கேட்டுக் கொண்டே இருக்கும். நீ பிள்ளைகளைப்பெற்றவனா?
ஈவு இரக்கம் இல்லாத அரக்கனே, உன்னைக் கண்காணித்துக் கொண்டுதான் இருக்கிறோம். படித்தவனுக்கு ஒரு வழி, படிக்காதவனுக்கு பலவழி.
பள்ளிக்கூடம் உள்ள இடத்தில் நினைவுப் பூங்கா அமைக்காவிட்டால் ஒவ்வொரு பெற்றோரும் மனித வெடிகுண்டுகளாக மாறி பள்ளியைதரைமட்டமாக்கி விடுவோம் என்று பகிரங்கமாக எச்சரிக்கிறோம்.
இப்படிக்கு குழந்தைகளின் பெற்றோர் என்று எழுதப்பட்டுள்ளது.
இந்த எச்சரிக்கை கும்பகோணத்தில் புதிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. டி.எஸ்.பி. பெருமாள் தலைமையில் போலீஸார் நோட்டீஸ் ஒட்டியவர்கள்குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.