நெல்லை அருகே அரசு பஸ் மீது வெடிகுண்டு வீச்சு!
திருநெல்வேலி:
திருநெல்வேலி மாவட்டத்தில் ஒரு அரசு பஸ் மீது இரண்டு இடங்களில் நாட்டு வெடிகுண்டு வீசப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக அந்த பஸ்ஸை ஒட்டி வந்த டிரைவர் சுப்பிரமணியம் என்பவர் பாளையங்கோட்டை போலீஸ் நிலையத்தில் கொடுத்துள்ள புகாரில்,
நெல்லை மாவட்டம் சென்னப்பட்டி என்ற இடத்திலிருந்து அரசு பஸ்ஸை திருநெல்வேலி நோக்கி ஓட்டி வந்து கொண்டிருந்தேன்.
அரியகுளம் அடுத்துள்ள சாரதா நகர் அருகே வந்தபோது ஆட்டோவில் வந்த ஒரு கும்பல் பஸ் மீது நாட்டு வெடிகுண்டை வீசியது. ஆனால் குண்டு வெடிக்கவில்லை.
இதையடுத்து அந்த ஆட்டோ கும்பல் மீண்டும் கே.டி.சி.நகர் அருகேயுள்ள காமாட்சி நகர் என்ற இடத்தில் மீண்டும் பஸ் மீது குண்டு வீசியது. இந்தக் குண்டு வெடித்தது, ஆனால் பஸ்சுக்கு சேதம் ஏற்படவில்லை என்று கூறியுள்ளார்.
ஆனால் போலீஸார் சம்பவ இடங்களுக்குச் சென்று விசாரித்தபோது வெடிகுண்டு எதுவும் வீசப்பட்டதாகவோ, வெடித்ததாகவோ தடயம் கிடைக்கவில்லை.இதுகுறித்து டிரைவரிடம் தொடர்ந்து போலீஸார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.