கிரிக்கெட்: முஷாரபுக்கு பிரதமர் அழைப்பு
டெல்லி:
இந்தியா-பாகிஸ்தான் மோதும் கிரிக்கெட் போட்டியைக் காண வருமாறு பாகிஸ்தான் அதிபர் முஷாரப்புக்கு பிரதமர் மன்மோகன் சிங் அழைப்பு விடுத்துள்ளார்.
இதைத் தொடர்ந்து அவர், விரைவில் இந்தியா வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் இப்போதே பாதுகாப்பு ஏற்பாடுகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.
பாகிஸ்தானின் முன்னாள் அதிபரான ஜெனரல் ஜியா உல் ஹக் ஒரு தீவிர கிரிக்கெட் ரசிகர். இவர் அதிபராக இருந்த போது இந்தியா-பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டியை பார்ப்பதற்காக டெல்லி வந்தார். அப்போது பிரதமராக ராஜீவ் காந்தி இருந்தார்.
தற்போது அதிபராக உள்ள முஷாரப்பும் ஒரு தீவிர கிரிக்கெட் ரசிகர். கடந்த வருடம் இந்தியா, பாகிஸ்தானுக்கு சென்றபோது ஒரு நாள் போட்டியை பார்ப்பதற்காக அவர் சென்றார்.
இந்நிலையில் பாகிஸ்தான் அணி தற்போது இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து வருகிறது. இரு அணிகளும் மோதும் ஒரு போட்டியை பார்க்க தனக்கு மிகவும் ஆவலாக இருப்பதாகவும், இந்திய அரசு முறைப்படி அழைத்தால் போட்டியைக் காண இந்தியா வரத் தயாராக இருப்பதாகவும் முஷாரப் சமீபத்தில் கூறினார்.
முஷாரப் வெளிப்படையாகவே இந்தியா வர விருப்பம் தெரிவித்ததை தொடர்ந்து இந்தியாவும் அவரை அழைக்க தயாராக உள்ளது.
பிரதமர் மன்மோகன் சிங்கின் செய்தித் தொடர்பு ஆலோசகர் சஞ்சய், நேற்று டெல்லியில் நிருபர்களிடம் கூறுகையில், கிரிக்கெட் போட்டியைக் காண அதிபர் முஷாரப் இந்தியா வர விருப்பம் தெரிவித்துள்ளது மகிழ்ச்சியான விஷயமே.
அண்டை நாட்டு பிரமுகர்கள் இந்தியாவுக்கு எப்போது வேண்டுமானாலும் வரலாம். இந்தியா அவர்களுக்கு உரிய மரியாதையை அளிக்கும். இதற்கு முன்பு பாகிஸ்தான் அதிபராக இருந்த ஜெனரல் ஜியா உல் ஹக், கிரிக்கெட் போட்டியைக் காண்பதற்காக இந்தியா வந்த போது அவருக்கு சிறப்பான வரவேற்பு அளித்தோம்.
முஷாரப் இந்தியா வந்தால் அவரது பயணம் அரசு முறைப் பயணமாக இருக்காது. இரு நாடுகளுக்கும் இடையேயான நட்புப் பயணமாகவே இருக்கும். இது தொடர்பாக இரு நாட்டு வெளியுறவுத் துறை அதிகாரிகளும் ஆலோசனை நடத்தி வருகின்றனர் என்றார்.
இதற்கிடையே இன்று லோக் சபாவில் பேசிய பிரதமர் மன்மோகன் சிங், இந்தியா-பாகிஸ்தான் போட்டியைக் காண வருமாறு முஷாரப்புக்கும், அவரது குடும்பத்தினருக்கும் அழைப்பு விடுத்துள்ளார்.
இரு அணிகளுக்கும் இடையேயான 2வது டெஸ்ட் போட்டி 16ம் தேதி கொல்கத்தாவில் தொடங்குகிறது. இந்தப் போட்டியைக் காண முஷாரப் வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதனால் அவரை வரவேற்க பிரதமர் அலுவலகம் தயாராகி வருகிறது. பாதுகாப்பு ஏற்பாடுகளும் முடுக்கி விடப்பட்டுள்ளன.
சேவாக் அபாரம்:
இதற்கிடையே நேற்று 2வது நாள் ஆட்டம் மதியம் வரை மழையால் பாதிக்கப்பட்டது. பிற்பகல் 2.20 மணிக்கு ஆட்டம் தொடங்கியது.தொடக்க ஆட்டக்காரர்களாக சேவாக்கும், காம்பிரும் களமிறங்கினர். சேவாக் வழக்கம் போல தனது அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
நேற்று ஆட்ட நேர முடிவில் இந்தியா, 1 விக்கெட் இழப்பிற்கு 184 ரன்கள் எடுத்திருந்தது. சேவாக் 95 ரன்களுடனும். திராவிட் 39 ரன்களுடனும் ஆடிக்கொண்டிருந்தனர். காம்பிர் 41 ரன்களில் டேனிஷ் கனேரியா பந்தில் ஆட்டமிழந்தார்.
இன்று 3வது நாள் ஆட்டம் தொடங்கியது. சேவாக் தொடர்ந்து சிறப்பாக ஆடி சதமடித்தார். 72 ஓவர்கள் முடிவில் இந்தியா 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 318 ரன்கள் எடுத்துள்ளது. சேவாக் 166 ரன்களுடனும், டெண்டுல்கர் 46 ரன்களுடனும் ஆடிக்கொண்டிருக்கின்றனர். திராவிட் 50 ரன்களில் ஆட்டமிழந்தார்.












Click it and Unblock the Notifications