பிரான்சிலிருந்து இந்தியா வரும் நச்சு கலவை
பாரிஸ்:
சுற்றுப்புற சூழலுக்கும் உடல் நலத்துக்கும் பெரும் கேடு விளைவிக்கும் நச்சுத்தன்மை கலந்த ஆஸ்பெஸ்டாஸ் ரசாயனக் கலவையை இந்தியாவுக்கு கொண்டு சென்று சுத்திகரிப்பு செய்வதற்கு பிரான்ஸ் சமூக நல அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.
இதற்கான பஆஸ்பெஸ்டாஸ் தகடுகள் தயாரிக்கப் பயன்படும் ஆஸ்பெஸ்டாஸ் கலவை மிகவும் கொடிய விஷத்தன்மை கொண்டதாகும். இந்த விஷத்தன்மையை நீக்கும் தொழிற்சாலை பிரான்சில் பல இடங்களில் உள்ளன.
இதனால் சுற்றுப்புற சூழலுக்கு பெரும் பாதிப்பு ஏற்படும் என்பதால் அவற்றை மூடக்கோரி பிரான்சில் ஆஸ்பெஸ்டாஸ் எதிர்ப்பு அமைப்புகள் போராட்டம் நடத்தி வருகின்றன.
இதை தொடர்ந்து ஆஸ்பெஸ்டாஸ் கலவையை இந்தியாவுக்கு அனுப்பி விஷத் தன்மையை நீக்கி, மீண்டும் பிரான்சுக்குக் கொண்டு வந்து பயன்படுத்த அந் நாட்டு தொழிற்சாலைகளும் அரசும் திட்டமிட்டுள்ளன.
இதற்கும் ஆஸ்பெஸ்டாஸ் எதிர்ப்பு அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக இந்த அமைப்புகள் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
விஷத்தன்மையை நீக்குவதற்காக 22 டன் ஆஸ்பெஸ்டாஸ் கலவை இந்தியாவுக்கு கொண்டு செல்லப்படுகிறது. இந்தக் கலவையை ஏற்றிய கப்பல் குஜராத்துக்குப் புறப்படவுள்ளது.
சுற்றுப்புற சூழலுக்கும், இந்தக் கலவையை சுத்திகரிப்பு செய்யும் தொழிலாளர்களுக்கும் இது பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால் இவற்றை இந்தியாவுக்கு கொண்டு செல்ல தடை விதிக்க வேண்டும்.
சர்வதேச தொழிலாளர் ஒப்பந்தங்களை மீறி, புற்றுநோய் ஏற்படுத்தும் இந்தக் கலவையை இந்தியத் தொழிலாளர்களைக் கொண்டு சுத்தம் செய்ய முயற்சி நடக்கிறது. இது சட்டவிரோதமான, மனிதாபிமானமற்ற, பொறுப்பில்லாத செயல் என்று கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications