மரபுகளைப் பின்பற்றுங்கள்: ஜெ, காளிமுத்துவுக்கு ராமதாஸ் அறிவுரை
சென்னை:
சட்டசபையின் மரபுகளை மதித்து முதல்வரும், சபாநாயகரும் செயல்பட வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் அறிவுரை கூறியுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சட்டசபையில் புதன்கிழமை நடந்த சம்பவங்கள் ஆரோக்கியமானவை அல்ல. பொது முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சனைகளில் அமைச்சர்கள் 110வது விதியின் கீழ் அறிக்கை தாக்கல் செய்யலாம்.
இந்த விதியை தவறாகப் பயன்படுத்தக் கூடாது. மரபுகளை பின்பற்ற வேண்டும்.
பேரவையில் விவாதத்ததைத் தவிர்க்க வேண்டும் என்பதற்காகவோ, ஒருவர் மீது புகார் கூற வேண்டும் என்பதற்காகவோ இந்த விதியை பயன்படுத்தக் கூடாது. எந்த அமைச்சராவது அப்படிச் செய்ய முயன்றால் அதற்கு பேரவைத் தலைவர் அனுமதி அளிக்கக் கூடாது என்று கூறியுள்ளார் ராமதாஸ்.
ஜி.கே.வாசன் கண்டனம்:
தமிழக சட்டசபையில் திமுக உறுப்பினர்கள் குண்டுக் கட்டாக வெளியேற்றப்பட்டதற்கு காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசனும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்கள் பிரச்சினைகளைப் பேச விடாமல் தடுக்கும் நடவடிக்கைகள் சட்டசபைக் கூட்டங்களில் அதிகரித்து வருகிறது.
இதனால் மக்கள் பிரச்சினைகளைத் திசை திருப்ப முடியுமே தவிர மக்கள் ஆதரவை அதிமுகவால் பெற்றுவிட முடியாது. இதுபோன்ற அடாவடி செயல்களை மக்கள் ஒருபோதும் ஆதரிக்க மாட்டார்கள் என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications