Ottanchatram Temple festival on
ஒட்டன்சத்திரம்:
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே உள்ள இடையக்கோட்டை வலையப்பட்டி கிராமத்தில் நடந்த அம்மன் கோவில் திருவிழாவில் பக்தர்கள் தலையில் தேங்காய்களை உடைத்து, மண்டையில் ரத்தம் சொட்டச் சொட்ட நேர்த்திக்கடன் செலுத்தினர்.
இடையக்கோட்டை வலையப்பட்டி கிராமத்தில் உள்ள மகாலட்சுமி அம்மன் கோவில் திருவிழா வெகு விரிமசையாக நடந்து வருகிறது. குரும்பர் சமூகத்திற்குச் சொந்தமானது இந்தக் கோவில். இங்கு ஆண்டுதோறும் நடைபெரும் மாசி விழாவின்போது தலையில் தேங்காய் உடைத்து பக்தர்கள் நேர்த்திக் கடனை செலுத்துவது வழக்கம்.
இந்த ஆண்டுக்கான திருவிழா செவ்வாய்க்கிழமை தொடங்கியது. பல்வேறு சடங்குகள், அன்னதானம் உள்ளிட்டவை நடந்தேறின.
நேற்று நூற்றுக்கணக்கான ஆண்களும், பெண்களும் ஈரத் துணியுடன் முழங்காலிட்டபடி கோவில் வளாகத்தில் அமர்ந்தனர்.
பின்னர் கோவில் பூசாரி பூச்சப்பன் கோவில் மரத்தில் தீபமேற்றினார். அதன் பிறகு தேங்காய்களை எடுத்து முழங்காலிட்டபடி அமர்ந்திருந்த பக்தர்களின் தலையில் உடைத்துக் கொண்டே சென்றார். தேங்காய் உடைத்ததில் பல பக்தர்களின் தலையில் காயம் ஏற்பட்டது. பலருக்கும் ரத்தம் வழிந்தது.
அவர்களின் தலையில் பூசாரி திருநீரைக் கொட்டினார். தலையில் தேங்காய் உடைத்ததில் பலருக்கும் மண்டை வீங்கியது.
அதன் பின்னர், பேய் பிடித்தவர்கள் என்று கூறப்பட்ட பெண்கள் அவர் முன் நிறுத்தப்பட்டனர். அவர்களின் முதுகில் சாட்டையால் அடித்து அவர்களைப் பிடித்திருந்த துர் தேவதைகள் விலகட்டும் என்று கோஷமிட்டவாறு சென்றார். சாட்டையடி பட்ட பெண்கள் ஆவேசத்துடன் சாமியாடினர்.
இதையடுத்து அவர்களுடன் வந்தவர்கள், பேய் விலகி விட்டது என்று பரவசத்துடன் கூறியபடி அவர்களை அழைத்துச் சென்றனர்.
திண்டுக்கல், திருச்சி, கரூர் மாவட்டங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் இந்த திருவிழாவுக்கு வந்திருந்தனர்.
தலையில் தேங்காய் உடைத்ததில் பலரும் வீக்கத்துடன் திரும்பிச் சென்றனர்.