சுனாமி: இலங்கையில் தமிழக ஐஏஎஸ் அதிகாரிகள்
நாகப்பட்டினம்:
இலங்கையில் சுனாமி பாதித்த பகுதிகளில் நிவாரணப் பணிகளை தீவிரப்படுத்த அதிகாரிகளுக்கு சுதந்திரம் இல்லை என்று இலங்கை சென்று திரும்பிய நாகை மாவட்ட ஆட்சியர் ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.
கடந்த டிசம்பர் 26ம் தேதி இந்தியா, இலங்கை மற்றும் இந்தோனேஷியாவில் ஏற்பட்ட சுனாமி தாக்குதலில் 1 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பரிதாபமாக இறந்தனர். தமிழ்நாட்டில் நாகை,கடலூர், கன்னியாகுமரி உட்பட பல மாவட்டங்களில் கடும் பாதிப்பு ஏற்பட்டது.
நாகை மாவட்டத்தில் அப்போது கலெக்டராக இருந்தவர் சுறுசுறுப்பாக செயல்படவில்லை என்று கூறி தஞ்சை மாவட்ட கலெக்டராக இருந்த ராதாகிருஷ்ணன், நாகை மாவட்ட கலெக்டராக மாற்றப்பட்டார்.
ராதாகிருஷ்ணன் வேகமாக செயல்பட்டு மீட்பு மற்றும் நிவாரணப்பணிகளை முடுக்கி விட்டார். அவருடன் இணைந்து தமிழக ஊரக வளர்ச்சித் துறை செயலாளர் சாந்த ஷீலா நாயரும் நிவாரணப்பணிகளில் சிறப்பாக செயல்பட்டார்.
இதை அறிந்த இலங்கை அரசு, தங்களது நாட்டில் சுனாமி பாதித்த பகுதிகளில் நிவாரணப் பணிகளை செய்ய கலெக்டர் ராதாகிருஷ்ணனையும், சாந்த ,ஷீலா நாயரையும் அனுப்புமாறு தமிழக அரசிடம் கோரிக்கை விடுத்தது.
இதை ஏற்று தமிழக அரசு இருவரையும் இலங்கைக்கு அனுப்பி வைத்தது. இதையடுத்து இலங்கை சென்று மீட்புப் பணிகளை கவனித்த இருவரும் சென்னை திரும்பினர்.
இலங்கையில் சுனாமி பாதித்த பகுதிகளில் ஏற்பட்ட அனுபவம் குறித்து கலெக்டர் ராதாகிருஷ்ணன் நிருபர்களிடம் கூறுகையில், அங்குள்ள மட்டக்களப்பு மாவட்டத்தில் கலெக்டராக இலங்கை தமிழரான சண்முகம் உள்ளார்.
அவர் நாவலாடி என்ற பகுதிக்கு அழைத்துச் சென்று சுனாமி பாதித்த பகுதிகளை காட்டினார். அங்கு இன்னும் சுனாமியால் ஏற்பட்ட சிதிலங்களை அகற்றப்படாததை கண்ட நாங்கள் உடனே அவற்றை அப்புறப்படுத்த வலியுறுத்தினோம்.
ஒவ்வொரு பணியினை மேற்கொள்வதற்கும் இலங்கை அரசிடமிருந்து உத்தரவை எதிர்பார்க்க வேண்டியுள்ளது. ஆனால் தமிழகத்தில் நிவாரணக்குழுக்கள் அந்தக் குழுக்கள் முழு சுதந்திரத்துடன் நிவாரணப்பணிகளில் ஈடுபட்டதை அவர்களிடம் எடுத்துரைத்தோம்.
சடலங்கள் மற்றும் இடிபாடுகளை போர்கால அடிப்படையில் அகற்றியதை நாங்கள் விளக்கினோம். எங்களது இந்த பயணம் இரு நாடுகளுக்கும் பயனளிப்பதாக இருந்தது என்றார்.












Click it and Unblock the Notifications