திண்டுக்கல் திமுக மாநாடு தொடக்கம்
திண்டுக்கல்:
திமுகவின் மண்டல மாநாடு இன்று திண்டுக்கலில் தொடங்கியது.
மதுரை புறநகர், திண்டுக்கல், தேனி ஆகிய மாவட்ட திமுகவினர் இணைந்து நடத்தும் இம் மாநாட்டுக்காக கோட்டைப் பட்டியில் 150 ஏக்கர் பரப்பளவில் மிகப் பெரிய மைதானம் உருவாக்கப்பட்டுள்ளது.
அண்ணாநகர் என்று பெயரிடப்பட்டுள்ள இங்கு 800 அடி நீள பிரமாண்டமான பந்தல் அமைக்கப்பட்டுள்ளது.
மாநாட்டுத் திடலின் முகப்பு ரோமானிய அரண்மனை போன்று வடிவமைக்கப்பட்டுள்ளது.
மாநாட்டில் கலந்து கொள்வதற்காக திமுக தலைவர் கருணாநிதி இன்று காலை பாண்டியன் ரெயில் மூலம் திண்டுக்கலை வந்தடைந்தார். ரயில் நிலையத்தில் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
காலை 9 மணியளவில் அண்ணா சிலைக்கு கருணாநிதி மாலை அணிவித்து விட்டு பிறகு மாநாட்டு பந்தலுக்கு வந்தார். அவருடன் திமுக பொருளாளர் ஆற்காடு வீராசாமி, துணைப் பொதுச்செயலாளர்கள் மு.க.ஸ்டாலின், பரிதி இளம்வழுதி, முதன்மை செயலாளர் துரை முருகன் ஆகியோர் வந்தனர்.
கருணாநிதியின் வயதைக் குறிக்கும் வகையில் பந்தலின் முன்பு 83 அடிக் கொடிக்கம்பம் வைக்கப்பட்டுள்ளது. இதில் வண்ணை தேவகி கொடியேற்றினார்.
மாநாட்டை முன்னாள் அமைச்சர் ரகுமான் கான் திறந்து வைத்தார். கோ.சி. மணி தலைமை உரை ஆற்றினார். தொடர்ந்து பல்வேறு பேச்சாளர்கள் பேசுகின்றனர். இறுதியாக பொதுச்செயலாளர் அன்பழகன் நிறைவுரையாற்றுகிறார்.
இரண்டாவது நாள் மாலை 4 மணியளவில் மாநாட்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்படுகின்றன. தொடர்ந்து திமுக கூட்டணிக் கட்சித் தலைவர்களான ஜி.கே. வாசன், ராமதாஸ், வைகோ, மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு மாநில செயலாளர் வரதராஜன், இந்திய கம்யூனிஸ்டு மாநில செயலாளர் நல்லக்கண்ணு,
தமிழ் மாநில இந்திய முஸ்லிம் லீக் தலைவர் காதர் முகைதீன், தமுமுக மாநில செயலாளர் ஜவாஹிருல்லா, எம்.ஜி.ஆர்.கழகத் தலைவர் ஆர்.எம்.வீரப்பன், அ.இ.மூ.மு.க.தலைவர் டாக்டர். சேதுராமன், பேராயர் எஸ்ரா சற்குணம் மற்றும் பலர் பேசுகின்றனர்.
நிறைவாக இரவு 8 மணியளவில் திமுக தலைவர் கருணாநிதி பேருரையாற்றுகிறார். மாநாட்டையொட்டி திண்டுக்கலில் இருந்து மதுரை வரை சாலையின் இரு மருங்கிலும் ஆயிரக்கணக்கான திமுக கொடிகள் பறக்க விடப்பட்டுள்ளன.