கூட்டணி கட்சிகளுக்கு கூடுதல் இடங்கள்: கருணாநிதி
திண்டுக்கல்:
சட்டசபைத் தேர்தலில் ஜனநாயக முற்போக்குக் கூட்டணியில் இடம் பெற்றுள்ள கட்சிகளுக்கு கூடுதல் சீட் தர தயாராக இருப்பதாகதிமுக தலைவர் கருணாநிதி அறிவித்துள்ளார்.
திண்டுக்கல் அருகே கோட்டைப்பட்டியில் நடந்த திமுக மண்டல மாநாட்டின் நிறைவாக கருணாநிதி பேசினார். மாநாட்டுப்பந்தலுக்கு வெளியே கொட்டிய கன மழையையும் பொருட்படுத்தாமல் ஆயிரக்கணக்கான திமுக தொண்டர்கள் கருணாநிதியின்பேச்சைக் கேட்டனர்.
அவர் பேசுகையில், 2 நாட்களாக நடந்த மாநாடு நிறைவுறும்போது மழை குறுக்கீடு செய்துள்ளது. ஆனாலும் இந்த மழைமக்களுக்குத் தேவை. மழை வந்து விட்டதே என யாரும் வேதனைப்படத் தேவையில்லை. மாமழை போற்றுதும் என்பதற்கேற்பமழைக்கிடையே பேச வாய்ப்புக் கிடைத்துள்ளது.
மத்தியில் கூட்டாட்சி, மாநிலத்தில் சுயாட்சி என்ற கொள்கை குறித்து விரிவாக விளக்குமாறு தம்பி வைகோ கோரிக்கை விடுத்தார்.வைகோ அன்றும், இன்றும் எனது தம்பிதான். அண்ணாத்துரை மறைந்த பின்பு திருச்சியில் கூடிய திமுக மாநாட்டில் ஐம்பெரும்கொள்கை முழக்கங்கள் அறிவிக்கப்பட்டது.
மத்தியில் கூட்டாட்சி, மாநிலத்தில் சுயாட்சி என்பது அதில் ஒன்று. இப்போதுதான் கூட்டணி ஆட்சி என்ற சொற்றொடர்பயன்படுத்தப் பட ஆரம்பித்துள்ளது. திமுகவைப் பொருத்தவரை மத்தியில் கூட்டாட்சி, மாநிலத்தில் சுயாட்சி என்ற கொள்கையில்எந்த மாற்றம் இல்லை. அதை நான் மறக்கவும் இல்லை.
கூட்டணி என்று நாம் பார்க்காமல், சர்வாதிகார ஆட்சியை வீழ்த்த நாமெல்லாம் ஒன்று சேர்ந்துள்ளோம். அதற்கு நாமெல்லாம்பாடுபடுவோம் என்று இங்கு பேசிய தலைவர்கள் கூறினார்கள். அதில் எனக்கு கருத்து வேறுபாடு இல்லை.
அதேபோல, வைகோ பேசுகையில், மத்தியில் கூட்டாட்சி என்றார், அதிலும் எனக்கு கருத்து வேறுபாடு இல்லை. நமக்குத் தேவைமாநிலத்தில் சுயாட்சிதான்.
சில நேரங்களில் கட்சித் தலைவர்கள் ஒன்றாக அமர்ந்து யார் யாருக்கு எத்தனை இடங்கள் என்று பேசி நாம் எல்லோரும் சேர்ந்துதேர்தலில் அதிக இடங்களைப் பிடிப்போம் என முடிவு செய்வார்கள். இது மேற்கு வங்கம், கேரளா போன்ற மாநிலங்களில் நடந்துவரும் முறை. அந்த மாநிலங்களுக்கு இது சாத்தியப்படும்.
மாநில சுயாட்சியை அடைய எந்தத் தியாகத்தையும் செய்யத் தயாராக இருக்கிறோம். மாநிலங்களுக்கு அதிக அதிகாரம் தரக்கூடாது, சுயாட்சி கோஷம் போடக் கூடாது என்று ஆதிக்க சக்தி கிளம்பினால், அதனை அடக்கவும், எதிர்த்துப் போராடவும்தயாராக இருக்கிறோம் என்று வைகோவுக்குக் கூறிக்கொள்ள விரும்புகிறேன்.
விரைவில் சட்டசபைத் தேர்தலை சந்திக்கவுள்ளோம். எனவே இப்போதிருந்தே தேர்தலை சந்திக்க மக்களை தயார்படுத்தவேண்டும். அதை திமுக தொண்டர்கள் இப்போதிருந்தே ஆரம்பிக்க வேண்டும்.
கூட்டணிக் கட்சிகள் அனைத்தும் வளர வேண்டும், பலம் பெற வேண்டும் என்பதுதான் எனது ஆசை. இதில் எனது சுயநலமும்உள்ளது. நமது அணிக்கு தேர்தலில் 200 இடங்கள் கிடைக்கும் என்றால், கூட்டணிக் கட்சிகளின் பலத்தின் மூலம் கூடுதல்இடங்கள் கிடைக்கும் அல்லவா?
எனவே பலம் பெற்றால், வலுப் பெற்றால், கூட்டணிக் கட்சிகள் கூடுதல் இடங்கள் கேட்டால் கூட ஒதுக்க நான் கவலைப்படமாட்டேன்.
கூட்டணிக் கட்சிகளுக்கு கூடுதல் இடங்களைத் தர திமுக தயாராகவே உள்ளது. இதற்காக கூட்டணிக் கட்சித் தலைவர்கள் அமர்ந்துபேசலாம். தமிழகத்தில் இப்போது இருக்கும் அராஜக ஆட்சியை நீக்க வேண்டும் என்றால் இதை செய்தாக வேண்டும்.
வைகோ பேசும்போது பலமுறை எனது கண்கள் கலங்கின என்றார் கருணாநிதி.












Click it and Unblock the Notifications