சாலை விபத்தில் துணை சபாநாயர் மருமகன் பலி
விழுப்புரம்:
துணை சபாநாயகர் வரகூர் அருணாச்சலத்தின் மருமகன் ராஜு விழுப்புரம் அருகே நடந்த சாலை விபத்தில் பலியானார்.
அருணாச்சலத்தின் மருமகன் ராஜு, புதுவை அரசு மருத்துவமனையில் டாக்டராகப் பணியாற்றி வந்தார். இன்று(வியாழக்கிழமை) அதிகாலை 4.30 மணிக்கு காரில் விழுப்புரம் சென்று கொண்டிருந்தார்.
மதகடிப்பட்டு என்ற இடத்திற்கு அருகே அவரது கார் சென்றபோது, எதிரே ஒரு வாகனம் மிக வேகமாக வந்துள்ளது. அதன் மீதுமோதி விடாமல் இருப்பதற்காக ராஜு காரை இடது புறம் திருப்பியுள்ளார்,
அப்போது நிலை தடுமாறி பனை மரத்தின் மீது கார் மோதியது. இதில் ராஜு சம்பவ இடத்திலேயே பரிதாபமாகப் பலியானார்.
ஜெ. இரங்கல்:
விபத்தில் ராஜு பலியானதற்கு முதல்வர் ஜெயலலிதா ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், அதிமுக அமைப்புச் செயலாளரும், சட்டமன்ற துணை தலைவருமான வரகூர்அருணாச்சலத்தின் மருமகன் டாக்டர் ராஜு விபத்தில் மரணடைந்தார் என்ற செய்தி அறிந்து துயருற்றேன்.
ராஜுவை இழந்து வாடும் அருணாச்சலத்துக்கும், அவரது குடும்பத்தாருக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக்கொள்கிறேன் என்று கூறியுள்ளார் ஜெயலலிதா.