மூடப்படுகிறது 100 வயது கல்லறைத் தோட்டம்!
சென்னை:
100 ஆண்டு கால பழமை வாய்ந்த சென்னை கீழ்ப்பாக்கம் கிறிஸ்தவக் கல்லறைத் தோட்டத்தில், பிணங்களை அடக்கம் செய்ய போதிய இடவசதி இல்லாத காரணத்தால் ஏப்ரல் 1ம் தேதியுடன் அந்தக் கல்லறை மூடப்படுகிறது.
கீழ்ப்பாக்கம் கார்டன் சாலையில் உள்ளது இந்த 100 ஆண்டு கல்லறைத் தோட்டம். இங்கு 50,000 உடல்கள் வரை புதைக்கப்பட்டுள்ளன.தற்போது ஒரு உடலைக் கூட புதைப்பதற்குக் கூட அங்கு இடவசதி இல்லை. இதையடுத்து அத் தோட்டத்தை மூடிவி முடிவுசெய்யப்பட்டுள்ளது.
இதுதொடர்பான முடிவு, சமீபத்தில் நடந்த சென்னை கல்லறைத் தோட்டக் குழுக் கூட்டத்தில் எடுக்கப்பட்டது. கல்லறைத் தோட்டவிதிகளின்படி, ஒரு உடல் புதைக்கப்பட்டால், அந்த இடம், புதைக்கப்பட்டவரின் குடும்பத்தினருக்கு சொந்தமானதாகி விடும். அந்த இடத்தைவேறுயாரும் பயன்படுத்த முடியாது.
இட நெருக்கடி காரணமாக கல்லறைத் தோட்டம் மூடப்பட்டாலும், அங்கு உடல்களை எரிக்கும் வசதியை ஏற்படுத்தவும் முடிவுசெய்யப்பட்டுள்ளது. இதற்கு பெரும்பாலான கிறிஸ்தவர்களும் சம்மதம் தெரிவித்துள்ளனர்.
இந்தக் கல்லறைத் தோட்டத்தில் விரைவில் மின்சார மயான வசதியை ஏற்படுத்துமாறு மாநகராட்சிக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது. இதன்பிறகு இந்த கல்லறைத் தாட்டத்திற்குக் கொண்டு வரப்படும் உடல்கள் எரியூட்டப்படும்.
இட நெருக்கடி காரணமாக ஒரு கல்லறைத் தோட்டம் முடப்படுவது தமிழகத்தில் இதுவே முதல்முறையாகும் என்கிறார் இத் தோட்ட குழுசெயலாளர் போஸ்கோ அலங்கார் ராஜ்.
சென்னையில் மொத்தம் 34 பொது மயானங்கள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications