உயர் நீதிமன்றத்தில் வெடிகுண்டு புரளி
சென்னை:
சென்னை உயர் நீதிமன்றத்தில் 3 வெடிகுண்டுகள் வைக்கப்பட்டிருப்பதாக வந்த தகவலால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
உயர் நீதிமன்றப் பதிவாளருக்கு இன்று காலை மர்மத் தொலைபேசி அழைப்பு ஒன்று வந்தது. அதில் பேசியவர் தனது பெயர் பாஷா என்று கூறிக் கொண்டார்.
அவர் பேசுகையில், உயர் நீதிமன்ற வளாகத்திற்குள் 3 வெடிகுண்டுகள் வைக்கப்பட்டுள்ளன. எப்போது வேண்டுமானாலும் அவை வெடிக்கலாம் என்று கூறி விட்டுதொடர்பைத் துண்டித்துவிட்டார்.
இதையடுத்து மாநகர காவல்துறை ஆணையரிடம் உயர் நீதிமன்றப் பதிவாளர் புகார் கொடுத்தார். இதைத் தொடர்ந்து இணை ஆணையர் சைலேந்திரபாபு தலைமையில்போலீஸ் படை விரைந்து வந்தது. வெடிகுண்டுகளைக் கண்டுபிடிக்கும் நிபுணர்களும் வந்தனர்.
உயர் நீதிமன்றம் முழுவதும் காவல்துறையினர் தீவிர தேடுதல் வேட்டை நடத்தினார். ஆனால் வெடிகுண்டுகள் எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை. இதையடுத்துவெடிகுண்டுப் புரளியைக் கிளப்பிய நபர் குறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
இந்தப் புரளி காரணமாக உயர் நீதிமன்ற வளாகத்தில் இன்று பெரும் பரபரப்பு நிலவியது.
கோவை தொடர் வெடிகுண்டு வழக்கில் கைதாகியுள்ள கேரளாவைச் சேர்ந்த மக்கள் ஜனநாயகக் கட்சித் தலைவர் அப்துல் நாசர் மதானி தாக்கல் செய்துள்ள ஜாமீன் மனுமீது இன்று உயர் நீதிமன்றத்தில் விசாரணை நடைபெறவுள்ள நிலையில் வெடிகுண்டு புரளி கிளம்பியிருப்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications