சங்கர மட மாஜி ஊழியருக்கு தனிப்படை சம்மன்
கலவை:
சங்கரராமன் கொலை வழக்கில் விசாரணைக்கு வருமாறு சங்கர மடத்தின் முன்னாள் ஊழியர் நாகராஜுக்கு காஞ்சிபுரம்தனிப்படை போலீஸார் சம்மன் அனுப்பியுள்ளனர்.
காஞ்சி விவகாரத்தில் கொஞ்ச காலமாக காட்டு பங்களா விசாரணைகள் நின்று போயிருந்தன. இந் நிலையில் மீண்டும் ஒருவருக்குவிசாரணைக்கு வருமாறு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
ரயில்வே துறையில் பணியாற்றி ஓய்வு பெற்ற நாகராஜு, காஞ்சிபுரம் சங்கர மடத்தில் சில காலம் பணியாற்றினார். பின்னர் கலவைமடத்திலும் அவர் பணியாற்றியுள்ளார். சமீபத்தில் உடல் நலம் பாதிக்கப்பட்டு ஹைதராபாத் சென்று விட்டார்.
இந் நிலையில் அவரை விசாரிக்க காஞ்சிபுரம் தனிப்படை போலீஸார் முடிவு செய்துள்ளனர்.
இதையடுத்து அவருக்கு விஷ்ணு காஞ்சி போலீஸார் சம்மன் அனுப்பியுள்ளனர். இந்த சம்மனை காவலர் ஒருவர் கலவைமடத்திற்குக் கொண்டு வந்தார். ஆனால் நாகராஜு ஹைதராபாத் சென்று விட்டதாக மடத்தினர் தெரிவிக்கவே அந்தக் காவலர்திரும்பிச் சென்றுவிட்டார்.
இந்த சம்மன் ஹைதராபாத் போலீஸ் மூலமோ அல்லது தபால் மூலமோ நாகராஜுக்கு அனுப்பப்படலாம் என்று தெரிகிறது.
அப்பு, ரவி காவல் நீட்டிப்பு:
இதற்கிடையே ஆடிட்டர் ராதாகிருஷ்ணன் தாக்கப்பட்ட வழக்கில் ரவி சுப்பிரமணியம், அப்பு ஆகியோரது சிறைக் காவல் வருகிற31ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது.
இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ரவி சுப்பிரமணியம், அப்பு ஆகியோர் சைதாப்பேட்டை 23வது நீதிமன்றத்தில் இன்றுஆஜர்படுத்தப்பட்டனர்.
அப்போது அவர்களது சிறைக் காவலை நீதிபதி உமா மகேஸ்வரி வரும் 31ம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டார்.
இந்த வழக்கிலும் ரவி சுப்பிரமணியம் அப்ரூவர் ஆகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications