கே.ஏ.எஸ். சேகரின் முன்ஜாமீன் மனு மீண்டும் தள்ளுபடி!
மதுரை:
பிரபல லாட்டரிச் சீட்டு அதிபர் கே.ஏ.எஸ்.சேகரின் முன் ஜாமீன் மனுவை இரண்டாவது முறையாக மதுரைஉயர்நீதிமன்றக் கிளை தள்ளுபடி செய்து விட்டது. இதனால் எந்த நேரமும் அவர் கைதாகக் கூடிய சூழ்நிலைஏற்பட்டுள்ளது.
மதுரையைச் சேர்ந்த கே.ஏ.எஸ். சேகர், லாட்டரிச் சீட்டில் தமிழகம் முழுக்கக் கொடி கட்டிப் பறந்தவர். தமிழகத்தின்மூலை முடுக்குகளில் எல்லாம் லாட்டரிச் சீட்டுக் கடைகளை நடத்தி தமிழக மக்கள் அனைவருக்கும்அறிமுகமானவர்.
இப்படி வாழ்ந்த சேகர் மீது, கடந்த 1983ம் ஆண்டு முதல் 2002ம் ஆண்டு வரை ரூ. 109 கோடி வரைக்கும் வணிகவரி செலுத்தாமல் மோசடி செய்ததாக லஞ்ச ஒழிப்புப் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
இதையடுத்து சேகர் தலைமறைவாகி விட்டார். முன் ஜாமீன் கோரி அவர், மதுரை உயர்நீதிமன்றத்தில் மனு செய்தார்.ஆனால் மனுவை உயர்நீதிமன்றக் கிளை தள்ளுபடி செய்து விட்டது. இரண்டாவது முறையாக சேகர் சார்பில் முன்ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டது.
அந்த மனு நீதிபதி சொக்கலிங்கம் முன்னிலையில் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது அரசுவழக்கறிஞர் வாதிடுகையில், இந்த வழக்கில் இன்னும் விசாரணை முடியவில்லை. எனவே மனுதாரருக்கு முன்ஜாமீன் வழங்கக் கூடாது என்று கூறினார்.
இதையடுத்து நீதிபதி சொக்கலிங்கம் தனது தீர்ப்பில், மனுதாரர் மீது மிகக் கடுமையான குற்றச்சாட்டுகள்கூறப்பட்டுள்ளன. மேலும், தனி நபர் சுதந்திரத்தை விட மாநில நலனே முக்கியம் என்பதால் மனுதாரரின் முன்ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்படுகிறது என்று கூறி சேகரின் மனுவைத் தள்ளுபடி செய்தார்.
இதைத் தொடர்ந்து கே.ஏ.எஸ். சேகர் எப்போது வேண்டுமானாலும் கைது செய்யப்படலாம் என்ற நிலைஏற்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications