பெங்களூர்: பள்ளிகளில் வெடிகுண்டு புரளி!
பெங்களூர்:
பெங்களூரில் 2 பள்ளிகளில் வெடிகுண்டு வைத்திருப்பதாக வந்த தகவலால் இன்று பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
சில வாரங்களுக்கு முன் டெல்லியில் பிடிபட்ட பாகிஸ்தான் தீவிரவாதிகள், பெங்களூரிலுள்ள சாப்ட்வேர் நிறுவனங்களை தாக்கப்போவதாக கூறிய தகவலை அடுத்து இது போன்ற புரளிகள் இப்போது அடுத்தடுத்து வந்த வண்ணம் உள்ளன.
விப்ரோ, இன்போசிஸ் மற்றும் எலக்ட்ரானிக் சிட்டியிலுள்ள சில சாப்ட்வேர் நிறுவனங்களில் வெடிகுண்டு இருப்பதாக கடந்தவாரம் புரளி கிளப்பப்பட்டது. இங்கு போலீஸார் பெரும் படையுடன் விரைந்து சென்று வெறும் கையுடன் திரும்பினர்.
இந் நிலையில், இங்குள்ள 2 கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாக வெளியான தகவலால்இன்றும் பெங்களூரில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
சஞ்சய் நகரிலுள்ள கேந்திரியா வித்யாலயா பள்ளியில் வெடிகுண்டு வைத்திருப்பதாக போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு மர்மத்தொலைபேசி அழைப்பு வந்தது. இதையடுத்து மாணவ, மாணவிகள் அனைவரும் பள்ளியை விட்டு அப்புறப்படுத்தப்பட்டனர்.
போலீஸார் விரைந்து சென்று அங்கு சோதனை நடத்தினர். ஆனால் வெடிகுண்டு எதுவும் சிக்கவில்லை.
இதேபோல ஜீவன்பீமா நகரிலுள்ள கேந்திரியா வித்யாலயா பள்ளியிலும் வெடிகுண்டு இருப்பதாக போலீஸுக்கு போன் வந்தது.இங்கும் மாணவர்கள் வீடுகளுக்கு அனுப்பப்பட்டனர். போலீஸார் சோதனை நடத்தியபோது குண்டுகள் ஏதும் சிக்கவில்லை.
வெடிகுண்டுகள் குறித்த செய்தியால் பல்வேறு பள்ளிகளிலும் பெற்றோர்கள் குவிந்தனர். இதனால் பெங்களூரில் பல இடங்களில்பெரும் பரபரப்பு நிலவியது.












Click it and Unblock the Notifications