கைதியை தப்ப விட்ட 3 போலீசார் கைது
விருதுநகர்:
பணியில் அலட்சியமாக இருந்து கைதியைத் தப்பவிட்ட 3 போலீசார் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கன்னியாகுமரி மாவட்டம் தக்கலையை சேர்ந்தவர் மணி என்ற குமரன். இவர் ஒரு வழக்கில் கைது செய்யப்பட்டு வேலூர்சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த வழக்கில் அவர் நேற்று பத்மநாபபுரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.
இதற்காக விவேகானந்தன், ராஜா, சாம்ராஜ் ஆகிய போலீசார் மணியை பஸ்சில் அழைத்து வந்தனர். நீதிமன்றத்தில்ஆஜர்படுத்திவிட்டு மீண்டும் பஸ்சில் மணியை வேலூருக்கு அழைத்துச் சென்றனர்.
வழியில் விருதுநகர் அருகே உள்ள வச்சக்காரப்பட்டி என்ற இடத்தில் டீ அருந்த பஸ்ஸை நிறுத்தினார் டிரைவர். அப்போது கைதிமணியும் சிறுநீர் வருவதாகக் கூறி கீழே இறங்கினார்.
அவரை போலீசார் பஸ்சிலிருந்து கீழே இறங்க அனுமதித்தனர்.
இந் நிலையில் திடீரென மணி தப்பியோட ஆரம்பித்தார். இதையடுத்து போலீசார் அவனை விரட்டிக் கொண்டு ஓடினர். ஆனால்,மணி மின்னல் வேகத்தில் பறக்கவே, அவனை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர் போலீசார்.
குண்டு ஒரு பக்கமும் மணி வேறு பக்கமுமாக பாய, தப்பிவிட்டான் மணி.
இதையடுத்து பணியில் அலட்சியமாக இருந்ததாகக் கூறி விவேகானந்தன், சாம்ராஜ், ராஜா ஆகிய மூன்று போலீசாரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications