தாஜ்மகால், ஒரு சிவன் கோவில்: பாஜக
லக்னெள:
தாஜ்மகால் ஒரு சிவன் கோவில் என்றும் அதை மீட்க சிவன் படையை உருவாக்கப் போவதாகவும் பாஜக அறிவித்துள்ளது.
பஜ்ரங் தள் மற்றும் பாஜகவின் முக்கியத் தலைவரான வினய் கட்யார் இது குறித்துக் கூறியதாவது:
தாஜ் மகால் ஒரு சிவன் கோவில். அதைக் கட்டியவர் ராஜா ஜெய் சிங். தாஜ்மகாலின் உண்மையான பெயர் தேஜோ மய் மகால்(ஒளிரும் அரண்மனை). அதைத் தான் தாஜ் மகாலாக்கிவிட்டார் இஸ்லாமிய மன்னர் ஷாஜகான்.
ஷாஜகானின் நெருங்கிய நண்பரான அப்துல் ஹமீத் லஹோரி எழுதியுள்ள பாத்ஷாநாமா என்ற புத்தகத்திலேயே இந்தவிவரங்கள் அடங்கியுள்ளன.
தனது மனைவி மும்தாஜ், புர்ஹான்பூர் என்ற இடத்தில் மறைந்த பிறகு அவரது உடலை ஆக்ராவுக்கு எடுத்துச் சென்ற ஷாஜகான்,அங்கிருந்த தேஜோ மய் மகால் கோவிலில் இருந்த சிவலிங்கத்தை அகற்றிவிட்டு, மும்தாஜின் உடலை அங்கு புதைத்தார்.
ஆகவே, தாஜ்மகால் இந்துக்களுக்குச் சொந்தமானது. அதை நாங்கள் நிச்சயம் மீட்டெடுப்போம். இதற்காக சங்கர் சேனா (சிவன்படை) உருவாக்கப்படும் என்றார்.
தாஜ் மகால் தங்களுக்கே சொந்தமானது என ஷியா பிரிவு இஸ்லாமிய அமைப்புகளும் உத்தரப் பிரதேச சன்னி பிரிவு வக்புவாரியமும் தீவிர மோதலில் இறங்கியுள்ள சூழ்நிலையில், இடையில் புகுந்துள்ளது பாஜக.
தாஜ்மகால் இருந்த இடம் ஒரு அடக்க ஸ்தலம் என்கிறது தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களின் முடிவுகள். அந்த அடக்கஸ்தலத்தில் தனது மனைவியை புதைத்த ஷாஜகான், அதன் மீது தாஜ்மகாலை எழுப்பினான் என்கிறார்கள் வரலாற்று ஆசிரியர்கள்.












Click it and Unblock the Notifications