திருச்சியில் நாளை தமிழ்ப் பாதுகாப்பு மாநாடு
திருவண்ணாமலை:
தமிழைக் காக்க வேண்டுமானால், தமிழை ஆட்சி மொழியாக, அலுவலக மொழியாக, நீதிமன்ற மொழியாக, திருமண மொழியாக மாற்ற வேண்டும் என பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறினார்.
தமிழ்ப் பாதுகாப்பு இயக்கத்தின் சார்பில் திருச்சியில் நாளை (சனிக்கிழமை) 3வது மொழிப் போர் மாநாடு நடக்கிறது.
இதில் பங்கேற்க தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ.நெடுமாறன் கோபிச்செட்டிப்பாளையத்திலிருந்தும், பாமக நிறுவனர் ராமதாஸ் சென்னையிலிருந்தும், விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் தொல். திருமாவளவன் பாண்டிச்சேரியிலிருந்தும், மூவேந்தர் மூவேந்தர் முன்னேற்றக் கழகத் தலைவர் டாக்டர் சேதுராமன் கன்னியாகுமரியிலிருந்தும் திருச்சியை நோக்கி ஊர்திப் பயணங்களை
மேற்கொண்டுள்ளனர். ஊர்திப் பயணமாக திருவண்ணாமலை வந்த ராமதாஸ் அங்கு நடந்த பொதுக் கூட்டத்தில் பேசுகையில்,
இதற்கு முன் எங்கும் தமிழ், எதிலும் தமிழ், இன்றும் தமிழ், என்றும் தமிழ் என்ற நிலை இருந்தது. இப்போது எங்கு தமிழ் என்ற நிலை உருவாகியுள்ளது. இதனால் தான் மொழிக்காக எல்லோரும் சேர்ந்து பாதுகாப்பு இயக்கத்தை தொடங்கியிருக்கிறோம்.
முன்பு பெரியாரும் அண்ணாவும் இந்தியை எதிர்த்து இரண்டு முறை மொழிப் போர் நடத்தினார்கள். இப்போது நடப்பது 3வது போர். இதற்கு அனைவரின் ஒத்துழைப்பும் வேண்டும்.
தமிழுக்கு எதிரானவர்களை அடையாளம் காண வேண்டும். நாம் ஒன்றுபட்டால் தமிழின் எதிரிகள் ஓடிப் போய்விடுவார்கள். நாம் எந்த மொழிக்கும் எதிரானவர்கள் அல்ல. தமிழை அழிக்க முயலும் மறைமுக முயற்சிகளை எதிர்க்கிறாம். அவ்வளவு தான்.
தமிழைக் காக்க வேண்டுமானால், தமிழை ஆட்சி மொழியாக, அலுவலக மொழியாக, நீதிமன்ற மொழியாக, திருமண மொழியாக மாற்ற வேண்டும்.
பேசுபவர் வாயை மணக்கவும், கேட்பவர் காதை இனிக்கவும் செய்யும் மொழி நம் தமிழ். அந்தத் தமிழைக் காக்க தலை தான் விலை என்றால் தலையைக் கொடுத்தும் காப்போம் என்றார் ராமதாஸ்.