நெல்லை:லாரி மீது மோதி ரயில் என்ஜின் சேதம்
திருநெல்வேலி:
திருநெல்வேலி அருகே ஆளில்லா ரயில்வே கிராசிங்கைக் கடந்த லாரி மீது ஹெளரா எக்ஸ்பிரஸ் ரயில் மோதியது. இதில் லாரியும்,ரயில் என்ஜினும் சேதமடைந்தன. லாரி டிரைவர் படுகாயமடைந்தார்.
கன்னியாகுமரியிலிருந்து ஹெளரா எக்ஸ்பிரஸ் ரயில் இன்று காலை கிளம்பியது. திருநெல்வேலி அருகே செங்குளம் என்றஇடத்தில் ஆளில்லா ரயில்வே கிராசிங்கை ரயில் நெருங்கியது. அப்போது லாரி ஒன்று படு வேகமாக கிராசிங்கைக் கடக்கமுயன்றது.
ஆனால் லாரி மீது ஹெளரா எக்ஸ்பிரஸ் ரயில் படு வேகமாக மோதி லாரியைத் தூக்கி வீசியது. இதில் லாரி முற்றிலும் சேதமுற்றது.லாரி டிரைவர் படுகாயமடைந்தார். அவரை பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.
இந்த விபத்தில், ரயில் என்ஜினும் சேதமடைந்தது. இதைத் தெடார்ந்து திருநெல்வேலியிலிருந்து மாற்று என்ஜின் கொண்டுவரப்பட்டு பின்னர் ரயில் 2 மணி நேரம் தாமதமாக புறப்பட்டுச் சென்றது.