பெங்களூரில் சீன அதிபர்: சாப்ட்வேர் துறையில் இணைந்து செயல்பட விருப்பம்
பெங்களூர்:
சீன அதிபர் வென் ஜியாபோ 4 நாள் இந்தியப் பயணமாக பெங்களூர் வந்துள்ளார். பெங்களூர் சாப்ட்வேர்துறை அதிபர்களுடன்ஆலோசனை நடத்திய அவர் (நாளை) திங்கள்கிழமை டெல்லியில் பிரதமர் மன்மோகன் சிங்கை சந்திக்கிறார்.
வழக்கமாக அரசுமுறைப் பயணமாக இந்தியா வரும் பிற நாட்டு அதிபர்கள் டெல்லிக்கு வந்து பிரதமர், ஜனாதிபதியை சந்தித்துவிட்டுபின்னர் தாங்கள் விரும்பும் பகுதிகளுக்குச் செல்வார்கள். ஆனால், 140 பேர் கொண்ட உயர் மட்டக் குழுவுடன் இந்தியா வந்துள்ள வென்ஜியாபோ நேராக நேற்று பெங்களூர் வந்தார்.
இன்று இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் தலைமையகத்துக்கும் (இஸ்ரோ), டாடா கன்சல்டன்சி சர்வீஸஸ் (டிசிஎஸ்) சாப்ட்வேர்நிறுவனத்துக்கும் வென் ஜியாபோ சென்றார்.
சீனாவில், டிசிஎஸ் நிறுவனம் பெருமளவில் முதலீடு செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.
டிசிஎஸ் நிறுவனத்தில் வென் ஜியாபோ பேசுகையில்,
சாப்ட்வேர்-ஹார்டுவேர் உற்பத்தியில் முன்னணியில் உள்ள இந்தியாவும், சீனாவும் இணைந்து செயல்பட்டால் தகவல்தொழில்நுட்பத்துறையில் அடுத்த நூற்றாண்டை ஆசியாவின் நூற்றாண்டாக மாற்றிவிட முடியும்.
பூஜ்யத்தைக் கண்டுபிடித்தவர்கள் இந்தியர்கள். இப்போது சாப்ட்வேர் துறையில் மாபெரும் சாதனைகள் படைத்து வருகிறீர்கள்.தொழில்நுட்பத் திறமை கொண்ட நாம் இருவரும் இணைந்து செயல்பட்டால் பெரும் சாதனைகள் படைக்கலாம்.
சீனாவில் உள்ள டிசிஎஸ்சின் வளாகத்தில் தான் அமெரிக்க கார் தயாரிப்பு நிறுவனமான ஜெனரல் மோட்டார்சின் டிசைன் பிரிவு ஆய்வகம்உள்ளது. சீனாவுக்கான கார்களை அமெரிக்கா அங்கு வடிவமைக்கிறது. அதை வடிவமைப்பது இந்தியாவைச் சேர்ந்த டிசிஎஸ் சாப்ட்வேர்நிபுணர்கள் தான் என்றார்.
டிசிஎஸ் தலைவர் ராமதுரை பேசுகையில், இந்தியாவில் உள்ள நாஸ்காம் போல சீனாவிலும் சாப்ட்வேர் நிறுவனங்களின் கூட்டமைப்பைஉருவாக்கித் தரத் தயாராக இருப்பதாகத் தெரிவித்தார்.
பின்னர் பெங்களூரில் இயங்கும் சீன சாப்ட்வேர் நிறுவனமான ஹூவேஸ் நிறுவனத்தையும் வென் பார்வையிட்டு அதில் பணியாற்றும்சாப்ட்வேர் நிபுணர்களுடன் கலந்துரையாடினார்.
சிப் டிசைனிங்கில் இந்தியாவுடன் இணைந்து செயல்பட சீன சாப்ட்வேர் நிறுவனங்கள் தயாராக இருப்பதாக அப்போது அவர் தெரிவித்தார்.
பின்னர் இஸ்ரோ தலைமையகத்துக்குச் சென்ற வென் ஜியாபோ, இந்தியாவின் செயற்கைக் கோள் தயாரிப்பு மையத்தை பார்வையிட்டார்.ராக்கெட் தொழில்நுட்பத்தில் இந்தியாவை விட சீனா முன்னணியில் இருந்தாலும் செயற்கைக் கோள்கள் தயாரிப்பில் சீனாவை விடஇந்தியா முன்னணியில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக ஜியாபோ இந்திய அறிவியல் மையத்தில் பேசிக் கொண்டிருந்தபோது, ஒரு கட்டடத்தின் மீதேறிய திபேத்திய வாலிபர், சீனஅரசுக்கு எதிராக கோஷம் எழுப்பியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து அவரை போலீசார் மடக்கிப் பிடித்து கைது செய்தனர்.
தனது இரண்டு நாள் பெங்களூர் பயணத்தை முடித்துக் கொண்டு வென் ஜியாபோ டெல்லி புறப்பட்டுச் சென்றார்.












Click it and Unblock the Notifications