ஸ்டாலின் மீது மானபங்க வழக்கு!
சென்னை:
பெண்களை மானபங்கப்படுத்தி, அவர்களது கெளரவத்தை குலைக்கும் வகையில் நடந்து கொண்டதாக திமுக துணைப் பொதுச்செயலாளர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட 60 பேர் மீது போலீஸார் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்துள்ளனர்.
கடந்த 19ம் தேதி சென்னை மாநகராட்சி வார்டு இடைத் தேர்தல் நடந்தது. அப்போது கள்ள ஓட்டுப் போட முயன்றதாக திமுகமற்றும் அதிமுகவினருக்கிடையே பெரும் மோதல் ஏற்பட்டது.
இரு கட்சியினரின் இந்தப் போராட்டத்தால் அண்ணா சாலையில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.ஆயிரக்கணக்கான பொதுமக்கள் பெரிதும் பாதிப்புக்குள்ளாகினர்.
இந்த நிலையில், சாலை மறியல் செய்தது, பெண்களிடம் இழிவாக நடந்து கொண்டது, பயங்கர ஆயுதங்களுடன் கூடியதுஉள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டவர்கள் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
அதிமுகவைச் சேர்ந்த பானு, சரஸ்வதி, அருள்கொடி, சகுந்தலா, பத்மா, பாக்கியம் ஆகிய 6 பெண்கள் இதுதொடர்பாக போலீஸில்கொடுத்த புகாரில், ஜெய்ப்பூர் காலனி பகுதியில் நடந்த வன்முறையின்போது,
மு.க.ஸ்டாலின் தலைமையிலான குழுவினர் எங்களை இழிவாகப் பேசியும், எங்களது கெளரவத்தைக் குலைக்கும் வகையிலும்,சேலையைக் கிழித்தும் மரியாதைக் குறைவாக நடந்து கொண்டார்கள் என்று கூறியிருந்தனர்.
இந்தப் புகாரின் அடிப்படையில், ஸ்டாலின், பரிதி இளம்வழுதி, .க.தமிழரசு, எஸ்.ஏ.எம்.உசேன் உள்ளிட்ட 60 பேர் மீதுராயப்பேட்டை போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
கலகம் விளைவித்தல், பயங்கர ஆயுதங்களுடன் கலகத்தில் ஈடுபடுவது, பயங்கர ஆயுதங்களுடன் கூடுதல், பெண்களின்மரியாதையைக் குலைக்கும் வகையில் செயல்படுதல், குற்ற நோக்குடன் கூடுதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் இவர்கள் மீது முதல்தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது.
கடந்த 19ம் தேதியே முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டு விட்டது என்றாலும் அதுகுறித்து போலீஸார் ரகசியமாகவைத்திருந்தனர். தற்போதுதான் இதுகுறித்து தகவல் வெளியிட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.