ஊழல் வழக்கு: லாலு மீது குற்றச்சாட்டு பதிவு
ராஞ்சி:
மாட்டுத்தீவன ஊழல் வழக்கில் லாலு மீது இன்று ராஞ்சி சிபிஐ நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது.
லாலு பிரசாத் யாதவ் பீகார் மாநில முதல்வராக இருந்த போது மாட்டுத்தீவனம் வாங்கியதில் 900 கோடி ரூபாய்க்கு ஊழல்நடந்ததாக கூறப்பட்டது. இது குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது.
ஊழல் விவகாரம் தொடர்பாக பாட்னா சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.மேலும் மாட்டுத்தீவன ஊழல் தொடர்பாக ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியிலுள்ள சிபிஐ நீதிமன்றத்திலும் வழக்கு தொடரப்பட்டது.
இங்குள்ள கருவூலத்தில் கால்நடைத்துறை கணக்கில் ரூ.37 கோடிக்கு முறைகேடாக பணம் எடுத்ததாக குற்றம்சாட்டப்பட்டிருந்தது. இந்த வழக்கு இன்று ராஞ்சி சிபிஐ நீதிபதி உமா சங்கர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
இதையொட்டி லாலு பிரசாத் இன்று நீதிமன்றத்தில் ஆஜரானார். அப்போது ரூ.37 கோடி பணத்தை முறைகேடாக எடுத்ததாக லாலுமீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது.
லாலு மத்திய அமைச்சர் ஆன பிறகு ஊழல் வழக்கில் அவர் ஆஜராவதும் அவர் மீது குற்றச்சாட்டு பதிவு செய்வதும் இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.