இடைத் தேர்தல்: தேர்தல் கமிஷனிடம் திமுக கூட்டணி எம்பிக்கள் மனு
மதுரை:
காஞ்சிபுரம், கும்மிடிப்பூண்டி இடைத் தேர்தலில்போது ஆளும் கட்சியினரும் போலீசாரும் சேர்ந்து கொண்டு தேர்தல்முறைகேடுகள் செய்வதைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என திமுக கூட்டணி எம்.பிக்கள் குழு தலைமை தேர்தல் ஆணையத்திடம் மனு கொடுத்துள்ளனர்.
தமிழக காங்கிரஸ் தலைவர் வாசன், திமுக எம்பி குப்புசாமி ஆகியோர் தலைமையில் காங்கிரஸ், திமுக, மதிமுக, பாமக,மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகளின் எம்.பிக்கள் அந்த மனுவை அளித்தனர்.
அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:
தமிழகத்தில் சமீபத்தில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தல்களில் 500 ஓட்டுச்சாவடிகளுக்கு மேல் சூறையாடப்பட்டன.கூலிப்படையினரால் ஓட்டுச் சீட்டுகள் வெளியில் தூக்கி எறியப்பட்டன.
சென்னை மாநகராட்சி வார்டுகளுக்கு இடைத் தேர்தல் நடைபெற்ற போது, ஆளும்கட்சியினர் போலீசாரின் துணையோடு ஓட்டுச்சாவடிகளை கைப்பற்றினர். ஆளும்கட்சியினர் குண்டர்கள் துணையோடு ஓட்டுச் சாவடிகளை கைப்பற்றி கள்ள ஓட்டுகளைபோட்டனர். இதை தடுத்து ஜனநாயகத்தை காக்காமல் விட்ட போலீசாரின் செயல்பாடு அவமானத்துக்குரியது.
தமிழகத்தில் ஜனநாயகத்தை கொலை செய்ய அதிமுகவினருக்கு போலீசார் உதவி வருகின்றனர்.
எனவே, காஞ்சிபுரம், கும்மிடிப்பூண்டி சட்டசபைத் தொகுதிகளில் வரும் 14ம் தேதி நடைபெறும் இடைத் தேர்தலில், போதியபாதுகாப்பு ஏற்பாடுகளை தேர்தல் கமிஷன் உறுதி செய்ய வேண்டும். இரு தொகுதிகளிலும் அதிக எண்ணிக்கையில் தேர்தல்பார்வையாளர்களை நியமித்து தேர்தலை நேர்மையாக நடத்த வேண்டும்.
தேர்தலை சீர்குலைப்பவர்கள் மீது கடும் நடவடிக்கையை உடனே எடுக்க வேண்டும். இரு தொகுதிகளிலும் மாநில அமைச்சர்கள்நடமாட தடை விதிக்க வேண்டும்.
அனைத்து வாக்காளர்களையும் அடையாளம் கண்ட பிறகே ஓட்டு போட அனுமதிக்க வேண்டும். ஓட்டுச் சாவடிகளில் மத்தியரிசர்வ் போலீசாரை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த வேண்டும். அவர்களுக்கு தகுந்த ஆயுதங்கள் அளித்து, எந்தவித பயமும்இல்லாமல் பொது மக்கள் ஓட்டு போட வரச் செய்ய வேண்டும்.
எதிர்க்கட்சி வேட்பாளர்களுக்கும், ஏஜென்ட்களுக்கும் தேவையான பாதுகாப்பு அளிக்க வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறியுள்ளனர்.