அரசு பஸ்களில் இரட்டை இலை சின்னம்!
சென்னை:
தமிழக அரசு புதிதாக வாங்கி விட்டுள்ள பஸ்களில் இரட்டை இலை சின்னம் வரையப்பட்டுள்ளது. இதைக் கண்டித்து காங்கிரஸ்கட்சியினர் போராட்டத்தில் குதித்தனர்.
கடந்த மாதத்தில் சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகத்துக்கு புதிய பஸ்களை அரசு வாங்கியது. பெரும்பாலும் பச்சைநிறத்திலேயே (ஜோதிடர்களின் ஆலோசனைப்படி முதல்வர் ஜெயலலிதாவுக்கு உகந்த நிறம்) உள்ள அந்த பஸ்களில் அதிமுகவின்சின்னமான இரட்டை இலையை வரைந்துள்ளனர்.
இது குறித்து ஆளுநர் பர்னாலாவிடம் காங்கிரஸ் கட்சி மனு கொடுத்தது.
கையில் தார் வாளிகள், பிரஸ்களுடன் பாரிமுனை போக்குவரத்து டிப்போவை காங்கிரஸார் முற்றுகையிட்டனர்.
இதையடுத்து அங்கு போலீசார் குவிக்கப்பட்டனர். இதைத் தொடர்ந்து காங்கிரஸார் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
அப்போது வெளியே வந்த போக்குவரத்து டிப்போவின் அதிகாரிகள், இரட்டை இலை சின்னம் அழிக்கப்பட்டுவிட்டதாகவும்,இனிமேல் வரைய மாட்டோம் என்றும் உறுதியளித்தனர்.
இதையடுத்து காங்கிரஸார் கலைந்து சென்றனர்.
ஆளுநர் தரப்பில் இருந்து கேள்வி எழுப்பப்பட்டதாலேயே இரட்டை இலை சின்னம் அழிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
பச்சைமயமான மினி பஸ்கள்:
இதற்கிடையே தமிழகம் முழுவதும் மிக வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் மினி பஸ்கள் அனைத்தும் பச்சை வண்ணத்தில்இருக்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து அவை பச்சைக்கு மாறி வருகின்றன.