இலங்கை பிரச்சினை: நார்வே தூதர் இந்தியா வருகிறார்
டெல்லி:
இலங்கை தமிழர் பிரச்சினை குறித்து பேசுவதற்காக நார்வே தூதர் இந்தியா வருகிறார்.
விடுதலைப் புலிகளுக்கும், இலங்கை அரசுக்கும் இடையே நிலவி வரும் பிரச்சினைகளை தீர்க்கும் முயற்சியில் நார்வே நாட்டு தூதுக் குழுவினர் கடந்த சில வருடங்களாக ஈடுபட்டுள்ளனர். இந்த தூதுக் குழுவின் தலைவராக எரிக் சோல்கைம் உள்ளார்.
இந்த தூதுக் குழுவினர் அதிபர் சந்திரிகாவை பல முறை சந்தித்து பேசியது. சந்திரிகாவுக்கு முன் ரனில் விக்கிரமசிங்கே அதிபராக இருந்த போது நார்வே தூதுக் குழுவினர் நடத்திய சமரசப் பேச்சு வார்த்தையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டது.
இந் நிலையில் பல்வேறு சம்பவங்களால் இலங்கை அரசுக்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையே ஏற்கனவே நிலவி வந்த கருத்து வேறுபாடுகள் மேலும் அதிகரித்தன.
விடுதலைப் புலிகளிடம் இருந்து பிரிந்து சென்ற கருணா மற்றும் அவரது ஆதரவாளர்களுக்கு இலங்கை ராணுவம் ஆதரவளித்தது. இலங்கை ராணுவத்தின் ஆதரவுடன் கருணா அணியினர் விடுதலைப் புலிகளுக்கு எதிராக மோதலில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த குழப்பத்தால் கடந்த 3 வருடங்களாக அமுலில் இருந்த போர் நிறுத்தம் பாதிக்கப்படும் சூழ்நிலை உருவானது.
இதற்கு அடுத்து தமிழர் வாழும் பகுதிகளில் ஏற்பட்ட சுனாமி பாதிப்பை இலங்கை அரசு கண்டு கொள்ளாமல் இருந்தது. இதனால் மீண்டும் போர் வெடிக்கும் அபாயம் உருவாகும் என்று விடுதலைப் புலிகளின் அரசியல் பிரிவு தலைவர் தமிழச் செல்வன் எச்சரித்தார்.
இந் நிலையில் இலங்கை அரசுக்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையே மீண்டும் சமரச பேச்சுவார்த்தை தொடங்குவதற்கு இந்திய அரசின் உதவியை நாடி நார்வே தூதர் எரிக் சோல்கைம் இந்தியா வருகிறார்.












Click it and Unblock the Notifications