விடைத்தாள் மோசடி: அண்ணா பல்கலை. ஊழியர்களிடம் தீவிர விசாரணை
சென்னை:
சென்னை பொறியியல் கல்லூரி மாணவர்களின் விடைத்தாள் மோசடி தொடர்பாக, போலீஸ் காவலில் எடுக்கப்பட்டுள்ள அண்ணாபல்கலைக்கழக ஊழியர்கள் இருவரிடமும் போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந் நிலையில் விடைத்தாள் மோசடி தொடர்பாக கைதான 11 மாணவர்கள் ஜாமீனில் விடுதலையாகியுள்ளனர்.
நேற்று காவலில் எடுக்கப்பட்ட இருவரையும் இரவு முழுவதும் போலீஸார் துருவித் துருவி விசாரணை நடத்தினர்.விடைத் தாள்களை மாற்றியது எப்படி, எவ்வளவு பணம் கை மாறியது, எங்கு வைத்து மோசடி நடந்தது, வேறு யாருக்கு இதில் தொடர்புஉள்ளது என்பது உள்ளிட்ட தகவல்களை போலீஸார் இருவரிடமும் கேட்டு வாக்குமூலம் பெற்றனர்.
அதன் பின்னர், அவர்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில், பல்லாவரத்தில் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கிக் கிளைக்குச் சென்றபோலீஸார், அங்கு தாமஸின் சகோதரியின் பெயரில் வைப்பு நிதியாக ரூ. 2 லட்சம் முதலீடு செய்யப்பட்டிருப்பதை உறுதி செய்தனர்.பின்னர் அந்தப் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.
இந்த மோசடியில் தொடர்புடைய ஆந்திர மாணவர்கள் குறித்து விசாரிப்பதற்காக போலீஸ் குழு ஆந்திராவில் கடந்த 2 நாட்களாகவிசாரணை மேற்கொண்டுள்ளது. இருப்பினும் சரியன துப்பு கிடைக்கவில்லை என்று கூறப்படுகிறது.
11 மாணவர்கள் ஜாமீனில் விடுதலை
இதற்கிடையே விடைத் தாள்களை திருடி அதை மாற்றிய சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட சென்னை வள்ளியம்மை பொறியியல்கல்லூரி, கிரசன்ட் பொறியியல் கல்லூரி ஆகியவற்றைச் சேர்ந்த 11 மாணவர்கள் தங்களை ஜாமீனில் விடுதலை செய்யக் கோரிசைதாப்பேட்டை சென்னை பெருநகர நீதிமன்றத்தில் மனு செய்தனர்.
மனுக்களை விசாரித்த நீதிபதி வில்லியம்ஸ், 11 பேரையும் நிபந்தனை ஜாமீனில் விடுதலை செய்ய உத்தரவிட்டார். இவர்கள் தினமும் காலை10.30 மணிக்கு விசாரணை அதிகாரி முன் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார்.