கனடாவுக்கு மீண்டும் ஏர் இந்திய விமானங்கள்
டொரோன்டோ:
கனிஷ்கா விமான விபத்திற்கு பிறகு நிறுத்தி வைக்கப்பட்ட கனடா விமான சேவையை ஏர்-இந்தியா நாளை மீண்டும்துவக்குகிறது.
கடந்த 1985ம் ஆண்டு ஜூன் 23ம் தேதியன்று டொரன்டோ நகரிலிருந்து மும்பைக்கு ஏர்-இந்தியாவின் கனிஷ்கா விமானம்புறப்பட்டது. இந்த விமானத்தில் மொத்தம் 329 பயணிகள் இருந்தனர்.
விமானம் குண்டு வைத்து தகர்க்கப்பட்ட இந்த சம்பவத்திற்குப் பிறகு கனடாவுக்கு தனது விமான சேவையை ஏர்-இந்தியா நிறுத்திவைத்திருந்தது.
இந் நிலையில் நாளை முதல் கனடாவுக்கு மீண்டும் விமான சேவையை ஏர்-இந்தியா துவங்குகிறது. டெல்லியில் இருந்துபுறப்படும் இந்த விமானம் பர்மிங்ஹாம் வழியாக டொரன்டோ செல்லும்.
இந்த முதல் விமானத்தில் சிறுபான்மை ஆணைய தலைவர் திரிலோச்சன் சிங், பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.எஸ்.கில்,ரீட்டா சோதி மற்றும் பல்வந்த் சிங் ராமுவாலியா ஆகியோரும் பயணம் செய்கின்றனர்.
நாளை மாலை இந்த விமானம் டொரன்டோ விமான நிலையத்தை அடையும். 20 வருடங்களுக்குப் பிறகு வரும் இந்த முதல்விமானத்தை வரவேற்க டொரன்டோவிலுள்ள இந்தியர்கள் சிறப்பு ஏற்பாடுகளை செய்துள்ளனர்.