வண்டி வண்டியாய் மண்ணைக் கவ்விய திமுக
காஞ்சிபுரம் - கும்மிடிப்பூண்டி:
காஞ்சிபுரம் மற்றும் கும்மிடிப்பூண்டி ஆகிய இரு தொகுதிகளிலும் அதிமுக வேட்பாளர்கள் பெரும் வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெற்றனர். இரு தொகுதிகளிலும் திமுக மண்ணைக் கவ்வியது.
காஞ்சிபுரம் மற்றும் தொகுதிகளுக்கான இடைத் தேர்தல் கடந்த 14ம் தேதி நடைபெற்றது. காஞ்சியில் 70 சதவீதமும்,கும்மிடிப்பூண்டியில் 76 சதவீத வாக்குகளும் பதிவாயின.
இத் தொகுதிகளின் வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்குத் தொடங்கியது. முதலில் காஞ்சியில் திமுகவும் கும்மிடியில்அதிமுகவும் முன்னணியில் இருந்தன. தொடர்ந்து வாக்குகள் எண்ணப்பட்ட போது அதிமுகவே இரு இடங்களிலும் முன்னிலைபெற்றது.
காஞ்சிபுரம் தொகுதிக்கான ஓட்டு எண்ணிக்கை 14 மேஜைகளில் நடைபெற்றது. மேஜைக்கு, ஒரு மேற்பார்வையாளரும், ஒருஉதவியாளரும் இருந்தனர். மொத்தம் 27 சுற்றுக்களாக வாக்குகள் எண்ணப்பட்டன. கும்மிடிப்பூண்டி வாக்குகள் 14 சுற்றுக்களாகஎண்ணப்பட்டன.
கும்மிடிப்பூண்டியில் வாக்கு எண்ணிக்கை முடிவில் அதிமுக வேட்பாளர் கே.எஸ்.விஜயகுமார் 27,162 வாக்குகள் வித்தியாசத்தில்வெற்றி பெற்றார். திமுக வேட்பாளர் வெங்கடாசலபதி தோற்றார்.
அதே போல காஞ்சிபுரத்தில் அதிமுக வேட்பாளர் மைதிலி திருநாவுக்கரசு 17,648 வாக்கு வித்தியாசத்தில் வெற்றிவாகை சூடினார்.
பாமக, காங்கிரஸ், மதிமுக, இடதுசாரிகள், தேசியலீக் என பெரும் படையைத் திரட்டிக் கொண்டு மிக நம்பிக்கையுடன் தேர்தலில்போட்டியிட்ட திமுக பெரும் தோல்வி அடைந்துள்ளது. இந்தத் தேர்தலில் வாக்காளர்களுக்கு அதிமுகவினர் பெருமளவில் பணபட்டுவாடா செய்ததாக பரவலாக புகார்கள் இருந்தாலும், தேர்தல் நேர்மையாகவே நடந்து முடிந்தது.
தேர்தல் கமிஷனின் சிறப்புப் பார்வையாளர் கே.ஜே.ராவின் நேரடிக் கண்காணிப்பில் தேர்தல் மிக அமைதியாகவும் முறையாகவும்நடந்தது குறிப்பிடத்தக்கது.