தமிழகத்தை சுட்டெரிக்கும் கத்திரி வெயில்!
சென்னை:
தமிழகம் முழுவதும் வெயில், குறிப்பாக சென்னை, வேலூர், அரக்கோணம், சேலம் ஆகிய பகுதிகளில் சுட்டெரித்து வருகிறது.
இந் நிலையில் கடும் வெயில் இன்னும் சில நாட்களுக்கு நீடிக்கும் என வானிலை ஆராய்ச்சி நிலையம் தெரிவித்துள்ளது.
கடும் வெயில் காரணமாக பகல் நேரங்களில் சாலைகளில் மனித நடமாட்டம் வெகுவாக குறைந்து காணப்படுகிறது.
கடும் வெயிலுக்கு இதுவரை சென்னையில் 3 பேர் இறந்துள்ளனர். சென்னையில் தினசரி சராசரியாக 105 டிகி வெயில் அடிக்கிறது.இதனால், சென்னை கடற்கரைகளில் மாலையில் மக்கள் கூட்டம் அலை மோதுகிறது. இரவு நெடு நேரம் கழித்தே மக்கள்வீடுகளுக்குள் செல்கின்றனர்.
கத்திரி வெயில் சீசன் வரும் 28ம் தேதி முடிவடைகிறது. அதன் பின்னரே வெப்ப நிலையில் கொஞ்சம் தாழ்வு இருக்கும் என்றுதெரிகிறது.
வெயில் அதிகமாக இருப்பது குறித்து சென்னை நுங்கம்பாக்கம் வானிலை ஆராய்ச்சி நிலைய இயக்குனர் ரமணன் கூறுகையில்,கடல் காற்று நகருக்குள் வீசவில்லை. இதனால் தான் வெயில் அதிகமாக இருக்கிறது, மேலும் அனல் காற்றும் வீசுகிறது.
இன்னும் ஒரு தினங்கள் இந்த நிலை நீடிக்கும். ஆனால் வெயில் எப்போது குறையும் என்பதை உறுதியாக சொல்ல முடியாதுஎன்றார் ரமணன்.
கொளுத்தும் வெயிலைத் தொடர்ந்து குளிர்பானங்கள், இளநீர் விற்பனை படு சூடாக நடந்து வருகிறது.