திருச்செந்தூரில் மீண்டும் உள்வாங்கிய கடல்: பக்தர்கள் பீதி
திருச்செந்தூர்:
திருச்செந்தூரில் இன்று காலை திடீரென 25 அடி தூரத்திற்கு கடல் உள்வாங்கியது. இன்று வைகாசி விசாகம் என்பதால் கடற்கரையில்குவிந்திருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் இதைக் கண்டு பீதியடைந்தனர்.
கடந்த சில தினங்களாக கன்னியாகுமரி மாவட்டத்தில் தொடர்ந்து கடல் கொந்தளிப்பு ஏற்பட்டு வருகிறது. இதனால் இப்பகுதியிலுள்ள1000க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வெளியேறி விட்டன.
இதையடுத்து நேற்று தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே ஈராச்சி என்ற கிராமத்தில் லேசான நில அதிர்வு ஏற்பட்டது. இதனால்இங்கும் பீதி ஏற்பட்டது.
இந் நிலையில் திருச்செந்தூர் கடல் இன்று காலை திடீரென உள்வாங்கியது. காலை 8 மணியளவில் கோவில் பகுதியை ஒட்டிய கடலில் சுமார்25 அடி தொலைவுக்கு கடல் நீர் உள்வாங்கியது. திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கும், அய்யா வழி கோவிலுக்கும் இடைப்பட்ட பகுதியில்கடல் உள் வாங்கியது.
இன்று வைகாசி விசாகத்தையொட்டி திருச்செந்தூரில் லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்திருந்தனர்.கடல் உள்வாங்கியதைக் கண்டதும்பக்தர்கள் மத்தியில் பீதி ஏற்பட்டது. ஆனாலும் அவர்கள் அனைவரும் அச்சப்படாமல் கடலில் குளித்து மகிழ்ந்தனர்.
இது குறித்து இங்கு வந்த பக்தர்கள் கூறுகையில், பல இடங்களிலும் கடல் கொந்தளிப்பு ஏற்படுகின்ற போதிலும், திருச்செந்தூரில் மட்டும்அவ்வாறு இல்லாமல் கடல் உள்வாங்குகிறது. இது முருகப் பெருமானின் அருளாகும் என்றனர்.
திருச்செந்தூரில் கடல் உள்வாங்குவது இது 3வது முறையாகும். கடந்த டிசம்பரில் சுனாமி ஏற்பட்டபோது இங்கு கடல் உள்வாங்கியது.இதற்குப் பிறகு கடந்த 2 மாதங்களுக்கு முன்பும் கடல் உள்வாங்கியது. தற்போது 3வது முறையாக கடல் உள்வாங்கியுள்ளது.