தமிழ் இனத்தின் அடையாளம் குறள்: கருணாநிதி
சென்னை:
திருக்குறள் தமிழ் இனத்தின் அடையாளமாகத் திகழ்கிறது என்று திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.
"வான் புகழ் வள்ளுவம் என்ற பெயரில் திருக்குறளுக்கு புதிய இலக்கிய வடிவில் கருணாநிதி உரை எழுதியுள்ளார். இந்நூல் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது.விழாவுக்கு திமுக பொதுச் செயலாளர் அன்பழகன் தலைமை வகித்தார்.
முன்னாள் துணைவேந்தர் வா.செ. குழந்தைசாமி முதல் நூலை வெளியிட, முதல் பிரதியை மதிமுக பொதுச் செயலாளர் வைகோ பெற்றுக் கொண்டார்.
விழாவில் கருணாநிதி பேசுகையில், நான் ஆட்சிப் பொறுப்பில் இருந்த போது, கன்னியாகுமரியில் திருவள்ளுவர் சிலை திறப்பு விழா நடைபெற்றது. வள்ளுவர்சிலையை நான் திறந்த போது என் மெய் சிலிர்த்தது. உணர்ச்சி மேலிட நா தழுதழுத்தது.
இதற்கு காரணம் என் ரத்தத்தோடு, உயிரோடு கலந்து விட்டவர் திருவள்ளுவர். திருவள்ளுவர் மீது எனக்கு ஏன் இவ்வளவு பாசம் என்று கேட்டால், அவர் என் பாட்டன்என்பேன். தமிழரின் உணர்வோடு திருக்குறள் கலந்தது தமிழரின் அடையாளம் ஆகும்.
முரசொலி இதழில் நான் எழுதிய "வான் புகழ் வள்ளுவம் தற்போது நூலாக வெளிவரக் காரணம் முதல் பிரதியை பெற்றுக் கொண்ட வைகோ தான் என்றார் கருணாநிதி.
வைகோ பேசுகையில், திருக்குறளில் தமிழ் என்ற சொல் இல்லை. தமிழ்நாட்டு நதிகள், மலைகள், கடல், ஊர்கள் எதுவும் குறிப்பிடப்படவில்லை. காரணம் உலகத்திற்கேபொதுவாக இருக்க வேண்டும் என்பதற்காக அவ்வாறு எழுதப்பட்டுள்ளது. எனவே ஐநா மன்றத்தில் திருக்குறள் பொது நூலாக இடம்பெற வேண்டும் என்றார்.
நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கவிஞர் வைரமுத்து பேசுகையில், திருக்குறளுக்கு உரை எழுதியவர்கள் ஏராளமானோர். ஆனால் இலக்கியத்தையே உரையாகஎழுதியிருக்கிறார் கருணாநிதி என்றார்.












Click it and Unblock the Notifications