பெரிய மனிதர்களின் இடையூறுகள்: ஜெ. சாடல்
திருநெல்வேலி:
தமிழக வளர்ச்சிக்காக தான் பாடுபட்டுக் கொண்டிருக்கும் போது, அதைப் பொறுத்துக் கொள்ள முடியாமல் சிலபெரிய மனிதர்கள் தனக்கு இடையூறு செய்வதாக முதல்வர் ஜெயலலிதா கடுமையாக சாடியுள்ளார்.
சென்னையிலிருந்து விமானம் மூலம் தூத்துக்குடி சென்ற ஜெயலலிதா, அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் நெல்லைசென்றார். அங்கு அவருக்கு 21 யானைகள் புடை சூழ, செண்டை மேளம் முழங்க வரவேற்பு அளிக்கப்பட்டது.இதையடுத்து விழா நடந்த பொருட்காட்சி மைதானத்திற்கு ஜெயலலிதா அழைத்துச் செல்லப்பட்டார்.
பின்னர் அங்கு நடந்த விழாவில் வ.உ.சி.மணி மண்டபத்தைத் திறந்து வைத்தார். அதன் பின்னர், ரூ. 116.58கோடி மதிப்பில் செயல்படுத்தப்பட்டுள்ள திட்டப் பணிகளை தொடங்கி வைத்தார்.
மேலும் ரூ. 107.94 கோடி மதிப்பில் நிறைவேற்றப்படவுள்ள 2203 திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.இது தவிர 6988 பேருக்கு ரூ. 3.87 கோடி மதிப்பிலான நலத் திட்ட உதவிகளையும் அவர் வழங்கினார்.
பெரிய மனிதர்களின் இடையூறு:
பின்னர் நிகழ்ச்சியில் ஜெயலலிதா பேசுகையில், தமிழக வளர்ச்சிக்காக நான் பல திட்டங்களை அமல்படுத்திவருகிறேன், அறிவித்தும் வருகிறேன். ஆனால் இவற்றையெல்லாம் தமிழகத்தில் உள்ள சில ‘பெரிய’மனிதர்களால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை.
எனது பணிகளுக்கும், தமிழக நலனுக்காக நான் பாடுபடுவதற்கும் இடையூறுகள், சிக்கல்கள், தடைகளைஏற்படுத்தி அவர்கள் அதில் இன்பம் கண்டு வருகிறார்கள். ஆனால் மக்கள் எனது பணியை உணர்ந்துள்ளனர்.எனவே இந்த பெரிய மனிதர்களின் வேலை மக்களிடம் பலிக்காது.
நெல்லை மாவட்டத்தில் கடலோரத்தில் உள்ள 11 கிராமங்களில் ரூ. 27 கோடியில் கடல் தடுப்பு சுவர்களை கட்டதிட்டமிடப்பட்டுள்ளது. இதன் மூலம் எதிர்காலத்தில் சுனாமி போன்ற இயற்கைச் சீரழிவுகளிலிருந்து இந்தகிராமங்கள் காப்பாற்றப்படும் என்றார் ஜெயலலிதா.
நிகழ்ச்சியின் போது வ.உ.சியின் பேரன் குமாருக்கு அரசு வேலை வழங்குவதற்கான உத்தரவை ஜெயலலிதாஅவரிடம் வழங்கினார். விழாவில் மாவட்ட ஆட்சித் தலைவர் அதுல் ஆனந்த், அமைச்சர்கள், காங்கிரஸ் எம்.பி.தனுஷ்கோடி ஆதித்தன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.