ஜெ.வை விமர்சிப்பதா? ராமதாஸுக்கு அமைச்சர் கண்டனம்
சென்னை:
நுழைவுத் தேர்வு பிரச்சினையில் முதல்வர் ஜெயலலிதாவுக்கு எதிராக அவதூறு பேசுவதை பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ்நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று தமிழக கல்வி அமைச்சர் சி.வி.சண்முகம் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக சண்முகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், மருத்துவம் மற்றும் பொறியியல் கல்வி மாணவர் சேர்க்கை பிளஸ் டூதேர்வு மதிப்பெண்கள் அடிப்படையில் நடத்தப்படும் என தமிழக அரசு அறிவித்தபோது பெரும்பாலான மாணவர்களும்,பெற்றோர்களும் அதை வரவேற்றனர்.
அரசின் இந்த அறிவிப்பை முதலில் ஆதரித்த ராமதாஸ், பின்னர் தனது நிலையை மாற்றிக் கொண்டார். கிராமப்புறமாணவர்களின் நலன் கருதியே நுழைவுத் தேர்வு முறையை முதல்வர் ஜெயலலிதா ரத்து செய்தார்.
ஆனால் மத்திய அரசின் விதிமுறைகளைக் காரணம் காட்டி சென்னை உயர்நீதிமன்றம் அரசாணையை ரத்து செய்தது. மேலும்இதை எதிர்த்து தமிழக அரசு மேல் முறையீடு செய்தபோது, உயர்நீதிமன்ற தீர்ப்பை உறுதி செய்தது உச்சநீதிமன்றம்.
எனவே தான் வேறு வழியின்றி பழைய முறைப்படியே மாணவர் சேர்க்கை நடைபெறும் என முதல்வர் அறிவித்தார்.மாணவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டே இந்த முடிவை முதல்வர் எடுத்துள்ளார். ஆனால் இதை ராமதாஸ்விமர்சித்துள்ளார். அவரது விமர்சனத்தில் அறிவார்ந்த வாதம் இல்லை.
நுழைவுத் தேர்வு விவகாரத்தில் சட்டத்திற்குப்பட்ட அனைத்து நடவடிக்கைகளையும் தமிழக அரசு செய்து விட்டது. ஆனால்மருத்துவ படிப்புக்கான நுழைவுத் தேர்வை நீக்குவதற்கு இந்திய மருத்துவ கவுன்சிலின் சில விதிமுறைகள் இடையூறாகஇருக்கின்றன.
இதுபோன்ற தடைகளை நீக்குவதற்கு, மத்தியில் ஆட்சிப் பொறுப்பில் பங்கு வகிக்கும் தமிழக மத்திய அமைச்சர்கள், ராமதாஸ்இடம் பெற்றுள்ள கூட்டணியின் எம்.பிக்கள் எந்த முயற்சியும் செய்யாதது ஏன் என்று மக்கள் கேட்கிறார்கள்.
கிராமப்புற மாணவர்களின் நலனுக்கு எதிராக உள்ள இந்திய மருத்துவக் கவுன்சிலின் விதிமுறைகளை நீக்குமாறு மத்தியில்சுகாதாரத் துறை அமைச்சராக உள்ள தனது மகன் அன்புமணியிடம் ராமதாஸ் கூறாதது ஏன்?
மக்களின் இந்தக் கேள்விகளுக்குப் பதிலளிக்க முடியாத ராமதாஸ், தமிழக அரசை விமர்சிக்கத் தகுதியில்லை. தாங்கள் வெற்றிபெற்று கோட்டைக்குள் நுழைந்து ஆட்சியமைத்தால் நுழைவுத் தேர்வை ரத்து செய்வோம் என்று கூறியுள்ளார் ராமதாஸ்.
டெல்லி செங்கோட்டையில் ஆட்சிப் பொறுப்பில் இருந்து கொண்டே எதையும் செய்ய முடியாத ராமதாஸ், செயின்ட் ஜார்ஜ்கோட்டையைக் கைப்பற்றி என்ன செய்யப் போகிறார் என்று மக்கள் கூறுகிறார்கள்.
எனவே இனிமேலும் முதல்வர் ஜெயலலிதாவுக்கு எதிராக அவதூறு அறிக்கைகளை வெளியிடுவதை ராமதாஸ் நிறுத்திக்கொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ளார் சண்முகம்.